தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து..

கடந்த கால இருள் அகன்று மக்களின் கவலைகள் எல்லாம் நீங்க வேண்டும் எனக் கூறி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், ஜாதி, மத, இன, மொழி, பேதமற்ற புதிய சமத்துவ சமுதாயத்தை உருவாக்க பாடுபடுவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒ.பி.எஸ்.-இ.பி.எஸ். வாழ்த்து

புதிய ஆண்டும் நம்மை பொன்னுலகம் நோக்கி அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையோடு வாழ்வைத் தொடருவோம். கடந்த ஆண்டின் அனுபவங்கள் அனைத்தும் புதிய ஆண்டில் பயணிக்க உதவட்டும். நம்மால் இயன்ற வகைகளில் நண்பர்கள், உற்றார் உறவினர்கள் என மகிழ்ச்சியையும், அமைதியையும் பகிர்ந்து வாழ உறுதி ஏற்போம்.

திமு க தலைவர் ஸ்டாலின்


புத்தாண்டு வாழ்த்து கடந்த கால இருள் நீங்கும்; கதிரொளி பரவும்; மக்களின் கவலைகளைத் துடைத்திட வல்ல, காக்கும் கரங்களைக் கொண்ட நல்லாட்சி தமிழகத்தில் மலரும்; தமிழ் மக்களுக்கு விடியல் தரும் வாழ்வு புலரும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் ஆங்கிலப் புத்தாண்டை உளமார வரவேற்று உவகை கொள்கிறேன். இருளை விரட்டும் உதயசூரியன் ஒளியாக, நெருக்கடி மிகுந்த நோய்த்தொற்றுப் பேரிடர் காலத்திலிருந்து உலகத்தாரும் – தமிழக மக்களும் வேகமாக மீண்டு வரும் எதிர்பார்ப்பினை நிறைவேற்றி வைக்கும் 2021 ஆங்கிலப் புத்தாண்டு நன்னாளில் அனைவருக்கும் இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கே.எஸ்.அழகிரி வாழ்த்து

வருகிற புத்தாண்டில் தமிழகத்தில் அரசியல் மாற்றமும், நல்லாட்சி மலர்ந்திடவும், தமிழக மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அந்த வகையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழகத்தின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும் என்று நிச்சயமாக நம்புகிறேன். தமிழக மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்


கொரோனா எனும் வைரஸ் பரவல் காரணமாக பெரும் சவால்களுடன் கூடிய புதிய அனுபவங்களை தந்து வரலாற்றில் பதிவு செய்கின்ற முக்கிய ஆண்டாக அமைந்த 2020-ம் ஆண்டை வெற்றிகரமாக கடந்து, சட்டசபை தேர்தலுடன் வரவுள்ள 2021 புத்தாண்டை வரவேற்க இருக்கிறோம். அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேமுதிக வாழ்த்து


சாதி மதங்களை கடந்து சமதர்ம சமத்துவம் அமைவதுடன் கொரோனா இல்லாத ஆண்டாக வரும் புத்தாண்டு அனையட்டும். மக்களின் துண்பங்கள் நீங்கி வாழ்வில் ஏற்றமும் வளமும் பெற்று வாழ வேண்டும்.

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

2021ஆம் ஆண்டு இருளுக்குப் பிறகு வரும் ஒளி; கோடைக்குப் பிறகு வரும் வசந்தகாலம். பாலையை கடந்த பிறகு வரும் சோலை. அந்த வகையில் 2021-ஆம் ஆண்டு இனிப்பாக அமையும். மகிழ்ச்சி பெருகும். அமைதியும், நிம்மதியும் அனைவருக்கும் கிடைக்கும். சமூகநீதி தழைக்கும் என்று கூறி, அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *