டென்மார்க்கிலும் ‘அஸ்ட்ரா ஜெனிக்கா’ தடுப்பு மருந்துக்கு தடை

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குணம் அடைந்து வீடு திரும்புகிறார்கள். என்றாலும், புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.ஏராளமான தடுப்பு மருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதில் ஒருசில மருந்துகளை செலுத்திக் கொள்வதால் பக்கவிளைவு ஏற்படுவது தெரியவந்தது.

பொதுவாக தடுப்பு மருந்துகளை பயன்படுத்தினால் காய்ச்சல், தலைவலி, உடல் வலி, சோர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம். இவை வழக்கமானதுதான்.ஆனால் அஸ்ட்ரா ஜெனிக்கா நிறுவனம் தயாரிக்கும் மருந்தை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு ரத்தம் உறையும் தன்மை ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன.

ஆஸ்திரியா நாட்டில் 42 வயதான நர்ஸ் ஒருவருக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டது. இதனால் அவருக்கு ரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்பட்டது. இதில் அவர் பலியானர்.இதையடுத்து, அந்த மருந்து பயன்பாட்டை ஆஸ்திரியா நிறுத்திக் கொண்டது. இதுதவிர எஸ்டானியா, லட்வியா, லித்வானியா, லக்சம்பர்க் ஆகிய நாடுகளும் அஸ்ட்ரா ஜெனிக்கா தடுப்பு மருந்தை பயன்படுத்துவதை நிறுத்திக் கொண்டன.

தற்போது டென்மார்க்கிலும் இந்த மருந்துக்கு தடைவிதிக்கப்பட்டது. இது குறித்து அந்த நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் போது, ‘மார்ச் 9-ந் தேதி ஐரோப்பியா நாடுகளில் அஸ்ட்ரா ஜெனிக்கா மருந்து செலுத்தியவர்களில் 22 பேருக்கு ரத்தம் உறைந்ததாக புகார்கள் எழுந்தன. எனவே அந்த மருந்து பயன்பாடு எங்கள் நாட்டில் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது’ என்று தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *