அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். இவர் ஜனவரி 20-ம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46-வது அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.
ஆனால், தற்போதைய அதிபரான டொனால்ட் டிரம்ப் ஜனநாயக கட்சி வேட்பாளர் பைடனின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
மேலும், தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் குற்றம் சுமத்தி நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்குகள் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், ஜோ பைடன் வரும் 20-ம் தேதி பதவியேற்க உள்ளதால் அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் பணிகள் நடந்து வரும் நிலையில்

பைடனின் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்றிதழை வழங்க எந்த தடையும் விதிக்கப்போவதில்லை என துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், வாஷிங்டன்னில் வெள்ளைமாளிகைக்கு வெளியே திரண்டிருந்த ஆதராவாளர்களை அதிபர் டிரம்ப் சந்தித்தார். அப்போது டிரம்ப் பேசியதாவது நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டோம்.
நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். நாம் தேர்தல் திருட்டை தடுத்து நிறுத்துவோம்.மைக் பென்ஸ் எங்களுக்காக வர வேண்டும். அவர் அவ்வாறு செய்யாவிட்டால் அது நமது நாட்டுக்கு சோகமான நாளாக அமையும்.
எனென்றால் அரசியலமைப்பை பாதுகாப்பதாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளீர்கள் என தெரிவித்துள்ளார்.
டிரம்பின் பேச்சால் உணர்ச்சிவசப்படும் அவரது ஆதரவாளர்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தி வந்தனர்.
இதற்கிடையில், ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று நடைபெற்று வந்தது.
காங்கிரஸ் உறுப்பினர்கள் முன்னிலையில் துணை அதிபர் மைக் பென்ஸ் தேர்தலில் வெற்றிபெற்ற பைடனை வெற்றியாளராக அங்கீகரிக்கும் நடைமுறைகளை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், பைடனை வெற்றியாளராக அங்கீகரிக்கும் நடைமுறை நடந்து வந்த நிலையில் திடீரென பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
அவர்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்தனர். அவர்களை தடுக்க போலீசார் முயற்சித்தபோதும் அவர்களது முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
அங்கு வைக்கப்பட்டு இருந்த தடுப்புகளை உடைத்து எறிந்து கொண்டு அவர்கள் உள்ளே நுழைந்தனர். ஒட்டுமொத்த கட்டிடத்தையும் முற்றுகையிட்டு கிட்டத்தட்ட தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டனர்.
இதையடுத்து பாராளுமன்றகட்டிடத்தின் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டு, பல செனட் உறுப்பினர்கள் உள்ளேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டனர்.
துணை அதிபர் மைக் பென்ஸ் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். அமெரிக்க வரலாற்றில் இது போல ஒரு மோசமான நிகழ்வு நடைபெற்றது கிடையாது என்று அந்த நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய டிரம்ப் தான் பேசிய வீடியோக்களை டுவிட்டரில் பதிவேற்றம் செய்தார். அதேபோல், டிரம்பின் பேச்சு பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலும் வேகமாக பரவியது.
இதையடுத்து, வன்முறையை தூண்டும் வகையில் இருந்த அந்த வீடியோக்களை டுவிட்டர், பேஸ்புக், யூடியூப் ஆகிய நிறுவனங்கள் தங்கள் பக்கங்களில் இருந்து உடனடியாக நீக்கினர்.
குறிப்பாக, தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக பேசிய வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அவர் தனது அதிகாரப்பூர்வ தனிப்பட்ட டுவிட்டர் பக்கமான @realDonaldTrump பக்கத்தில் இருந்து சில டுவிட்டுகள் செய்தார்.
இந்த டுவிட்டுகள் வன்முறையை தூண்டும் வகையில் இருந்ததால் அவற்றை டுவிட்டர் நிறுவனம் உடனடியாக நீக்கியது.
மேலும், விதிகளை மீறியதற்காக அதிபர் டிரம்பின் @realDonaldTrump பக்கத்தை டுவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்கியுள்ளது. டிரம்பின் டுவிட்டர் பக்கத்தை 88 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த 12 மணி நேரம் @realDonaldTrump டுவிட்டர் பக்கத்தை டிரம்ப் பயன்படுத்த முடியாத நிலைக்கு முடக்கப்பட்டுள்ளது என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன் பின்னரும் தொடர்ந்து டிரம்ப் வன்முறை மற்றும் தேர்தல் தொடர்பான தவறான தகவல்களை பரப்பினால் அவரின் @realDonaldTrump பக்கம் நிரந்தரமாக நீக்கப்படும் என டுவிட்டர் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.