கடந்த ஜனவரி மாதம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய வான் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசி சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் தீராப்பகை உருவானது.காசிம் சுலைமானி கொலைக்கு டிரம்ப் பதில் சொல்லியே ஆகவேண்டும் என ஈரான் ஏற்கனவே எச்சரித்துள்ளது.இந்த நிலையில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொலைக்கு டிரம்பை பழிவாங்குவோம் என ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.அயத்துல்லா அலி காமெனியின் அதிகாரபூர்வ வலைதளத்தில், டிரம்ப் கோல்ப் விளையாடிக் கொண்டிருக்கையில் அவரது தலைக்கு மேல் போர் விமானம் பறப்பது போன்ற ஒரு புகைப்படம் பகிரப்பட்டிருக்கிறது. அந்த பதிவில் பழிவாங்கப்படுவது நிச்சயம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.அதேபோல் அயத்துல்லா அலி காமெனியுடன் தொடர்புடைய டுவிட்டர் கணக்கிலும் இந்த புகைப்படம் பகிரப்பட்டது.இதையடுத்து விதிமுறைகளை மீறியதாக கூறி அந்த டுவிட்டர் கணக்கை டுவிட்டர் நிறுவனம் நிரந்தரமாக முடக்கியது. அதேசமயம் இந்த டுவிட்டர் கணக்கு அயத்துல்லா அலி மெனியுடையது இல்லை என்றும் போலியான டுவிட்டர் கணக்கு என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.