கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய ஆரம்ப நாட்களில் வுகானில் நோயாளிகளிற்கு சிகிச்சை அளித்த மருத்துவமனைக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் குழுவினர் இன்று விஜயம் மேற்கொண்டுள்ளனர்.கொரோனா வைரசின் ஆரம்பம் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக வுகானிற்கு சென்றுள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் 14 நாள் தனிமைப்படுத்தலின் பின்னர் நேற்று தங்கள் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.முதலில் சீனாவின் விஞ்ஞானிகளை சந்தித்த உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் கூபேயின் மாகாண மருத்துவமனைக்கு சென்றனர்.இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் உறுப்பினர் பீட்டர் டஸ்ஜாக் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய ஆரம்பநாட்களில் நோயாளிகளிற்கு சிகிச்சை வழங்கிய மருத்துவமனைக்கு நாங்கள் சென்றுள்ளோம் அங்குஅவ்வேளை பணியாற்றிய மருத்துவர்கள் பணியாளர்களை சந்தித்துள்ளோம்,அவர்களுடைய பணிகள் குறித்து வெளிப்படையான கலந்துரையாடல்களை மேற்கொண்டோம் என தெரிவித்துள்ளார்.உலக சுகாதார ஸ்தாபனத்தின் விஞ்ஞானிகள் ஆராய்ச்சியாளர்களை சந்திக்கவுள்ளதுடன் மருத்துவமனைகளுக்கும் வுகானின் சந்தைக்கும் செல்லவுள்ளனர்.சீன அதிகாரிகள் வழங்கிய ஆதாரங்களை அடிப்படையாகவைத்தே அவர்கள் தங்கள் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.