கிழக்கு முனையத்தை முழுமையாக கைப்பற்ற போராட்டம்!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முழுமையாக துறைமுக அதிகார சபையின் நிருவாகத்தின் கீழ் கொண்டுவரும் விதமாக போராட்டத்தை ஆரம்பிக்க 23 துறைமுக தொழிற்சங்கங்களும், 60 அரச மற்றும் அரச சார்பு தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளும் சிவில் மற்றும் மத அமைப்புகளும் ஒன்றிணைந்து தேசிய சபையை அமைத்துள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் 49 வீத உரிமத்தை இந்தியாவிற்கு வழங்குவதை உடனடியாக தடுத்து 100 வீத உரிமத்தையும் துறைமுக அதிகார சபைக்கே வழங்கவேண்டும் என்ற பிரதான கோரிக்கை உள்ளடங்கிய பிரேரணையை நாளை ஜனாதிபதிக்கும், ஜனாதிபதி நியமித்த குழுவிடமும் முன்வைக்கவுள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் உரிமத்தில் 49 வீதத்தை இந்திய நிறுவனமொன்றுக்கு கொடுக்கும் தீர்மானம் அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் தற்போது தொழிற்சங்கங்கள் மத்தியில் கடும் எதிர்ப்பினை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் 23 துறைமுக தொழிற்சங்கங்களும் இன்று கொழும்பில் கூடியதுடன் சகலரும் ஒன்றிணைந்து பிரேரணை ஒன்றினை உருவாக்கியுள்ளனர்.

இதில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் முழுமையாக துறைமுக அதிகார சபையின் கீழ் இயங்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கை உள்ளடங்கலாக பிரேரணை கோவை ஒன்றினை உருவாக்கியுள்ளனர்.

இந்தியாவிற்கு வழங்கப்படும் 49 வீத உரிமமானது எந்த விதத்திலும் இலங்கைக்கு சாதகமான விளைவுகளை தராது எனவும், துறைமுகத்தின் பாரிய பங்கினை ஏற்கனவே சீனா தன்வசப்படுத்தியுள்ள நிலையில் தற்போது இந்தியாவும் துறைமுகத்தில் ஒரு பங்கினை ஆகிரமிக்குமானால் இறுதியாக இலங்கைக்கு எந்தவொரு பங்குமே இல்லாது போகும் என்ற காரணியும் குறித்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அதேபோல் துறைமுகத்தின் கிழக்கு முனையமே இலங்கைக்கு அதிக வருமானத்தை ஈட்டித் தருகின்றது. அதனை இந்திய நிறுவனத்துடன் பங்குபோடுவது மிகப்பெரிய பாதிப்பை இலங்கைக்கு ஏற்படுத்தப்போவதாக தமது பிரேரணையில் உள்ளடக்கியுள்ளனர்.

மேலும் சீன -இந்திய வர்த்தக போட்டியோ அல்லது அரசியல், பாதுகாப்பு சார் முரண்பாடுகளோ ஏற்படும் நிலையில் இதில் ஒட்டுமொத்தமாக இலங்கையின் வருமானம் பாதிப்படையப்போகின்றது என்ற காரணியையும் சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் 23 தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள பிரேரணையை இன்றைய தினம் ஜனாதிபதிக்கும், கொழும்பு துறைமுக விவகாரங்களை ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவிற்கும் நாளைய தினம் கையளிக்கவுள்ளனர்.

அதேபோல் இன்றைய தினம் 23 தொழிற்சனங்களும் ஒன்றிணைந்து எடுத்த தீர்மானத்தில், தமது பிரதான தொழிற்சங்கங்களுடன் அரச மற்றும் அரச சார்பு அமைப்புகள் 60தையும், சிவில் அமைப்புகள் மற்றும் பெளத்த அமைப்புகள் உள்ளடங்கிய தேசிய சபை ஒன்றினை உருவாக்கியுள்ளனர்.

இதில் எதிர்க்கட்சியின் சார்பில் இயங்கும் ஜே.வி.பி, ஹெல உறுமைய ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்கங்கள் இணைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அடுத்து வரும் நாட்களில் தேசிய சபையில் பாரிய அளவிலான போராட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் பிரதிநிதிகள் கேசரிக்கு தெரிவித்தனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *