கலைஞர் எனும் மாபெரும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பிறந்தநாளில் வியந்து வாழ்த்துகிறேன்’ என கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவு

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தனது 68-வது பிறந்த நாளை கொண்டாடினார்.இன்று காலை 7 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இருவரது நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து வணங்கினார்.பின்னர் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு சென்றும் மரியாதை செலுத்தினார்.

பின்னர் தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள இல்லத்தில் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்தினரோடு கேக் வெட்டி கொண்டாடினார். குடும்பத்தினர் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.இதன் பின்னர் அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்குக்கு மு.க.ஸ்டாலின் சென்றார்.

அங்கு தி.மு.க. முன்னணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், கட்சி தொண்டர்கள் உள்ளிட்டோர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். நீண்ட வரிசையில் நின்று தொண்டர்கள் தெரிவித்த வாழ்த்துகளை மு.க. ஸ்டாலின் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயாளர் முத்தரசன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோரும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதே போன்று மற்ற தலைவர்களும் ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் ஸ்டாலினுக்கு தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், ‘விருட்சத்தின் கீழ் தாவரங்கள் வெளிச்சம் பெறுவதரிது. விழுதாக இருந்தால் கூடுதல் சுமை. கலைஞர் எனும் மாபெரும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பிறந்தநாளில் வியந்து வாழ்த்துகிறேன்’ என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *