இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் சுயநினைவின்றி மயங்கி கிடந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனை பார்க்க வந்தபோது நடிகர் விஜய் சேதுபதி கண்கலங்கியதாக, நடிகை சரண்யா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது: “சுயநினைவின்றி இருந்த எஸ்.பி.ஜனநாதன் சாரை விஜய் சேதுபதி தட்டி எழுப்பி பாத்தாரு. அருகில் இருந்தவர்கள், ஏன் இவ்ளோ வேகமா தட்டுறீங்கன்னு கேட்டதும், விஜய் சேதுபதிக்கு கோபம் வந்திருச்சு. ‘அவர் என்னுடைய டைரக்டர், நான் தட்டுனா அவருக்கு என் குரல் கேட்கும், அவர் எழுந்திருச்சிருவார்’ அப்டினு சொன்னார். ஆனால் விஜய் சேதுபதி தட்டியும் அவர் கண்முழிச்சி பார்க்கவே இல்லை. அதுக்கப்புறம் கண்கலங்கியபடி விஜய் சேதுபதி அங்கிருந்து சென்றார்” என சரண்யா தெரிவித்துள்ளார்.மேலும் எஸ்.பி.ஜனநாதனின் உடல்நிலை குறித்து யாரும் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார் சரண்யா. நடிகை சரண்யா, காதல், எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய பேராண்மை போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது எஸ்.பி.ஜனநாதனின் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.