20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் (குரூப்-2), இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா (குரூப்-1) ஆகிய 8 நாடுகள் நேரடியாக 2-வது சுற்றில் இருந்து விளையாடும். இலங்கை, வங்காள தேசம், அயர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகள் தகுதி சுற்றில் விளையாடும். இதில் இருந்து 4 அணிகள் 2-வது சுற்றுக்கு முன்னேறும். இந்த போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட பட்டியலை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார். அணியில், ஷிகர் தவான், யுஸ்வேந்திர சாகல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அணியின் வழிகாட்டியாக முன்னாள் கேப்டன் டோனி நியமிக்கப்பட்டுள்ளார்.