செய்யூர், மதுராந்தகம், உத்திரமேருர், காஞ்சிபுரம் தொகுதிகளில் வாக்கு சேகரிப்பு – நேரலை. https://t.co/KqmQ4kcyTG
— M.K.Stalin (@mkstalin) March 21, 2021
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை செய்யூர், மதுராந்தகம், காஞ்சீபுரம், உத்திரமேரூர் தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உத்திரமேரூர் டவுனில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
ஜனநாயகம் பிறந்த ஊர் இந்த ஊர். முதல் முறையாக ஓட்டு முறையை அறிமுகப்படுத்திய இந்த மண்ணுக்கு நான் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். பல்லவ மன்னர்கள் ஆண்ட காஞ்சி மண்ணுக்கு வந்திருக்கிறேன். அறிஞர் அண்ணா பிறந்த மண்ணுக்கு வந்திருக்கிறேன். எழுச்சி மிகுந்த காஞ்சி கோட்டைக்கு வந்திருக்கிறேன்.
தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அது எப்படிப்பட்ட ஆட்சி என்பது உங்களுக்கு தெரியும். கடந்த செப்டம்பர் 28-ந் தேதி ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம்.
கையில் கருப்பு கொடி ஏந்தி, இதே காஞ்சீபுரத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். மத்திய பா.ஜனதா ஆட்சி விவசாயிகளை கொடுமைப்படுத்த வேண்டும் என்பதற்காக 3 வேளாண் சட்டங்களை கொண்டுவந்ததை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் நடந்தது.
இப்போது முதல்- அமைச்சராக இருக்கக் கூடிய எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் அறிக்கையில் 3 வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் அ.தி.மு.க. எதிர்த்து குரல் கொடுக்கும் என்று திடீர் ஞானோதயம் வந்ததுபோல் கூறியிருக்கிறார். தேர்தல் வந்த காரணத்தால் விவசாயிகளை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக ஒரு அறிவிப்பை இந்த தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறார்கள்.
இதே எடப்பாடி பழனிசாமி முன்பு கூறும்போது ஸ்டாலினுக்கு விவசாயம் தெரியாது. தனக்குத்தான் விவசாயம் தெரியும் என்று கூறினார். எங்கு சென்றாலும் தான் ஒரு விவசாயி என்று தொடர்ந்து கூறுகிறார்.
தன்னை விவசாயி என்று கூறிக்கொண்டு, போராடக்கூடிய விவசாயிகளை கொச்சைப்படுத்தி பேசினார். இன்றும் டெல்லி யில் 120 நாட்களை தாண்டி விவசாயிகளின் போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது.
வெயில், பனி என்று எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளை தரகர்கள் என்று எடப்பாடி பழனிசாமி வாய் கூசாமல் கூறினார்.
விவசாயிகளை அழைத்து பேச வேண்டும் என்று பிரதமர் மோடியை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பா.ஜனதா ஆளக்கூடிய மாநிலங்களின் முதல்-அமைச்சர்கள் கூட இதனை வலியுறுத்தி வருகிறார்கள்.
ஆனால் தமிழக ஆட்சியாளர்கள் இதைப்பற்றி பேச பயப்படுகிறார்கள். விவசாயிகளை தரகர்கள் என்று கூறும் எடப்பாடி பழனிசாமியிடம் நான் ஒன்றை கேட்கிறேன். உங்களுக்கு தைரியம் இருந்தால், டெல்லிக்கு சென்று விவசாயிகளை சந்தித்து பேச நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? என்று நான் கேட்க விரும்புகிறேன்.
ஏற்கனவே அறிவித்த நிலைபாடுகளில் இருந்து தற்போது மாறுவதற்கு என்ன காரணம்? ஏனென்றால் இப்போது தேர்தல் வருகிறது. அதனால்தான் பச்சை துண்டு பழனிசாமி இன்று பச்சோந்தி பழனிசாமியாக மாறி மக்களை ஏமாற்ற தொடங்கி இருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வராகும் தகுதி இருக்கிறது என்று மக்கள் யாரும் ஓட்டுப்போடவில்லை.அவர் இப்போது முதல்- அமைச்சராக இருப்பதற்கு காரணம் ஜெயலலிதா மறைந்ததுதான். அது மட்டுமல்ல சசிகலா சிறைக்கு போனதும் காரணம்.
மேலும் ஓ.பன்னீர்செல்வம் கோபித்து கொண்டு தனி அணியை உருவாக்கியதும் காரணம். அதனால் ஏறி வந்த ஏணியை (சசிகலாவை) எட்டி உதைக்கக்கூடிய துரோகியாக இன்று அவர் இருந்து கொண்டிருக்கிறார்.
அ.தி.மு.க. ஆட்சியில் சாதித்து இருக்கிறோம் என்று ஒரு அபாண்டமான பொய்யை முதல்-அமைச்சர் எடப்பாடி சொல்லி இருக்கிறார்.
மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து எல்லா திட்டங்களையும் கொண்டு வந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். எல்லாத்தையும் சாதித்து விட்டோம் என்று கூறுகிறீர்களே? வர்தா புயல் வந்தபோது தமிழக அரசு சார்பில் கேட்கப்பட்ட நிதி 22 ஆயிரத்து 573 கோடி ரூபாய். ஆனால் மத்திய அரசிடமிருந்து வெறும் 266 கோடி ரூபாய்தான் நிதி வந்தது. ‘ஓகி’ புயலின் போது தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டது 9 ஆயிரத்து 302 கோடி ரூபாய். ஆனால் மத்திய அரசிடமிருந்து வந்த நிதி 133 கோடி ரூபாய்தான்.
கஜா புயலின் போது 17 ஆயிரத்து 899 கோடி ரூபாய் நிதி கேட்கப்பட்டது. ஆனால் 1,145 கோடி ரூபாய்தான் நிதி வந்தது. அதேபோல் நான் இன்னொன்றையும் கூறுகிறேன். நிவர் புயல் நிதி கிடைத்ததா? புரவி புயல் நிவாரணம் வந்ததா? ஜி.எஸ்.டி. வரி மூலம் பிடிக்கப்பட்ட தொகை வந்து சேர்ந்ததா? 15-வது நிதிக்குழு முரண் நீக்கப்பட்டதா? கொரோனா கால நிதி வந்ததா?
எதுவும் வந்து சேரவில்லை. பின்னர் எதற்கு கூட்டணி வைத்திருக்கிறீர்கள் என்ற கேள்வியைதான் நான் கேட்க விரும்புகிறேன்.
மத்திய அரசு, மாநில அரசுக்கு நிதி தராதபோது நான் சட்டமன்ற எதிர்கட்சியின் தலைவர் என்ற முறையில் தொடர்ந்து குரல் கொடுத்திருக்கிறேன். அதேபோல் நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் குரல் கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் கைகளை கட்டிக்கொண்டு, வாய்களை பொத்திக்கொண்டு ஒரு அடிமைபோல இருந்ததால், தமிழ்நாட்டுக்கு எந்த புதிய திட்டமும் வரவில்லை.
ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. மத்திய அரசு மூலம் எதுவும் செய்யாத ஒரு ஆட்சியாகத்தான் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சி இருக்கிறது.
கோட்டையில் உட்கார்ந்து கொண்டு காலை ஆட்டியபடி மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இதனால் இங்கு மக்கள் நிம்மதி இழந்து பல கொடுமைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
தமிழுக்கும், தமிழனுக்கும், தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டு, பா.ஜனதாவும், அ.தி.மு.க.வும் கூட்டணி வைத்துக்கொண்டு ஓட்டு கேட்க வருகிறார்கள். பா.ஜனதா மட்டுமல்ல ஒரு அ.தி.மு.க. வேட்பாளர்கள் கூட ஜெயிக்கக்கூடாது. நான் தொடர்ந்து 200 தொகுதிகளில் ஜெயிப்போம் என்று சொல்லிக்கொண்டு வந்தேன். இப்போது நான் சொல்லுகிறேன் தொடர்ந்து நான் பிரசாரம் செய்து கொண்டு வருவதை வைத்து சொல்கிறேன். 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணிதான் வெற்றிபெற போகிறது.
தப்பி தவறி ஒரு அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிபெற்றால்கூட அவர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கிடையாது. பா.ஜனதா எம்.எல்.ஏ. என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒரே ஒரு அ.தி.மு.க. வேட்பாளர் தான் வெற்றிபெற்றார். அவர் பா.ஜனதா எம்.பி.யாகத்தான் செயல்பட்டு கொண்டிருக்கிறார். அதனால் அ.தி.மு.க.வும் சரி, பா.ஜனதாவும் சரி ஜெயித்து வந்துவிடக் கூடாது. அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
பழனிசாமியை ஊர்ந்து சென்றவர் என்று நான் சொன்னால் அவருக்கு கோபம் வந்துவிடும். நான் என்ன பாம்பா? பல்லியா? என்று கேட்பார். பாம்பு, பல்லியைவிட துரோகத்துக்குத்தான் விஷம் அதிகம்.
பா.ஜனதாவின் கிளை கழகமாக அ.தி.மு.க. உள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் ஒரு கரும்புள்ளியை அ.தி.மு.க. ஏற்படுத்தி இருக்கிறது. எனவே இந்த கொள்ளை கூட்டத்தை கோட்டையில் இருந்து விரட்டுவதற்காகத்தான் தேர்தல் நடக்கிறது.
இங்குள்ள வேட்பாளருக்கு ஓட்டு கேட்க மட்டுமல்ல, எனக்காகவும்தான் ஓட்டு கேட்டு வந்திருக்கிறேன். முதல்- அமைச்சர் வேட்பாளராக வந்திருக்கிறேன்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நெசவாளர்கள் நலன்களை பாதுகாக்க தனியாக கூட்டுறவு வங்கி அமைக்கப்படும் கைத்தறி நெசவாளர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் 2 மாதத்துக்கு 200 யூனிட் என்பது, 300 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும்.
நெசவாளர்களுக்கு தடையின்றி நூல் கிடைக்க அரசே கொள்முதல் நிலையங்களை அமைத்து நெசவாளர் சங்கங்களுக்கு நூல் வழங்கப்படும். ஜவுளி துறையை மேம்படுத்துவதற்கு தனியாக ஜவுளி ஆணையம் அமைக்கப்படும். நெசவாளர்களுக்கு வீடு கட்ட மானியமாக வழங்கப்படும் தொகை 4 லட்சமாக உயர்த்தி தர நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த திட்டம் நகர்ப்புற நெசவாளர்களுக்கு விரிவுபடுத்தப்படும். இதுபோன்று நெசவாளர்களுக்கும் பல்வேறு சலுகைகளை தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறோம்.
பெண்கள் முன்னேற்றத்துக்கு கலைஞர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். குறிப்பாக மகளிர் சுயஉதவி குழுக்களை ஏற்படுத்தினார். இப்போது மகளிர் சுய உதவி குழுக்கள் என்ன நிலையில் இருக்கிறது என்று எண்ணுகிறபோது, வேதனையாக இருக்கிறது.
நான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று சுழல் நிதி, மானிய நிதி வழங்கி வந்தேன். தி.மு.க. ஆட்சியில் மகளிருக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தோம். ஆனால் இப்போது அப்படியில்லை.
எனவேதான் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பெண்கள் முன்னேற்றத்துக்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறோம். குடும்ப தலைவிக்கு உரிமை தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளோம்.
இதை அறிவித்தவுடன் மறுநாள் எடப்பாடி பழனிசாமி ரூ.1,500 வழங்குவதாக அறிவித்தார். ஏதோ அவர் ஆட்சிக்கு வருவதுபோல் அறிவித்திருக்கிறார்.
அவர்கள் ஆட்சிக்கு வரப்போவதில்லை. நாளைக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் ஹெலிகாப்டர் கூட தருவதாக கூறுவார்கள். ஆனால் அதை மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை.
தமிழ்நாட்டில் மத வெறியை புகுத்த அனுமதிக்க மாட்டோம். இது திராவிட, பெரியார் மண், மோடி மஸ்தான் வேலை இங்கு எடுபடாது. மாநில அரசு இழந்த உரிமைகளை மீட்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.