இலங்கையில் ஊடக சுதந்திரம் என்பது தான் வழங்கும் அனுமதிப்பத்திரம் இல்லை என்பதை இலங்கை ஜனாதிபதி உணரவேண்டும் என ஜேவிபியின் தலைவர் தெரிவித்துள்ளார்.மனித உரிமைகளையும் அபிவிருத்தியையும் உறுதி செய்வதற்காக நீண்ட கால போராட்டத்தின் ஊடாக மக்கள் பெற்றுக்கொண்டதே ஊடக சுதந்திரம் என அவர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கைகள் ஊடக நிறுவனங்களையும் ஊடகவியலாளர்களையும் இலக்குவைக்கும் அச்சம் தரும் பயங்கரமான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறப்போகின்றனவா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகங்கள் மீது தான் செல்வாக்கு செலுத்த முயலவில்லை என தெரிவித்துள்ளார்,இதன் மூலம் தெரியவருவது என்னவென்றால் அவரால் அப்படி செயற்படமுடியும் என்பதே என குறிப்பிட்டுள்ள ஜேவிபியின் தலைவர் அவருக்கு அவ்வாறு செயற்படுவதற்கான அதிகாரமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி இரண்டு வகையான அணுகுமுறையை பின்பற்றுகின்றார் ஒன்று தன்னை பாராட்டும் பத்திரிகையாளர்களின் தோளில் கைபோடுகின்றார் தன்னை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துகின்றார் எனவும் ஜேவிபியின் தலைவர் தெரிவித்துள்ளார்.