உலகின் எந்த பகுதியிலும் வாழும் முஸ்லிம்களுக்காக நாங்கள் குரல் கொடுப்போம்- தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் அதிபர் அஷ்ரப் கனி ஆட்சியை அகற்றி விட்டு ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். அங்கு தலிபான்களின் புதிய அரசு விரைவில் அமைய இருக்கிறது.ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதால் சர்வதேச சமூகம் மிகுந்த கவலை கொண்டிருக்கிறது. அந்தவகையில் இந்தியாவும் கவலை வெளியிட்டிருந்தது.குறிப்பாக காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பயங்கரவாதிகளுக்கு தங்கள் மண்ணை பயன்படுத்த தலிபான்கள் அனுமதிப்பார்கள் என்ற அச்சம் இந்தியாவில் ஏற்பட்டு உள்ளது.

இதை தோகாவில் சமீபத்தில் நடந்த தலிபான்களுடனான சந்திப்பின்போதும் இந்தியா எழுப்பி இருந்தது. அதாவது, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு யாரும் ஆப்கானிஸ்தானை பயன்படுத்த அனுதிக்கக்கூடாது என இந்திய தூதர் தீபக் மிட்டல், தலிபான் பிரதிநிதி முகமது அப்பாஸ் ஸ்டனிக்சாயிடம் எடுத்துரைத்திருந்தார்.அதற்கு, இந்த பிரச்சினை நேர்மறையாக கையாளப்படும் என தலிபான்கள் பதிலளித்திருந்தனர். ஆனால் இந்தியாவின் கவலையை உறுதி செய்யும் வகையில், காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுவோம் என தலிபான்களே மறைமுகமாக அறிவித்து உள்ளனர்.தலிபான்களின் தோகா அரசியல் அலுவலக செய்தி தொடர்பாளர் சுகைல் ஷகீன் பி.பி.சி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இது தொடர்பாக கூறியதாவது காஷ்மீர் உள்பட உலகின் எந்த பகுதியிலும் வாழும் முஸ்லிம்களுக்காக நாங்கள் குரல் கொடுப்போம். அதாவது, முஸ்லிம்கள் உங்கள் மக்கள், உங்கள் சொந்த குடிமக்கள், உங்கள் சட்டத்தின் கீழ் அவர்களுக்கும் சம உரிமை உண்டு என அந்தந்த நாடுகளுக்கு நாங்கள் வலியுறுத்துவோம்.

காஷ்மீர் மற்றும் வேறு எந்த நாட்டிலும் வாழும் முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பது, முஸ்லிம்கள் என்ற முறையில் எங்கள் அமைப்பின் உரிமை ஆகும்.இவ்வாறு சுகைல் ஷகீன் கூறினார்.அமெரிக்காவுடன் தோகாவில் செய்து கொண்ட ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டிய அவர், எந்த நாட்டுக்கு எதிராகவும் ஆயுத நடவடிக்கைகள் மேற்கொள்ளும் கொள்கை எதுவும் தங்கள் அமைப்பிடம் இல்லை எனவும் தெரிவித்தார்.ஹக்கானி குழுக்களை பற்றி ஷகீன் பேசும்போது, அவர்களும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகத்தின் ஒரு பகுதியினர்தான் எனக்கூறினார். அவர்களுக்கு எதிரான பிரசாரங்கள் அனைத்தும் வெறும் கூற்றுகளின் அடிப்படையில் மட்டுமே நடத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *