உருமாறிய கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருவதால் இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு – போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரிட்டன் தற்போது 5-வது இடத்தில் உள்ளது.தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 58,784 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மற்றும் ஒரே நாளில் 407 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 75,431 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பின் எதிரொலியாக இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் போரிஸ் ஜான்சன் மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே நாட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே பத்திரமாக இருக்க வேண்டும்.

இந்த ஊரடங்கின் புதிய விதிமுறைகளை இன்று முதல் பின்பற்ற வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த ஊரடங்கில் இருந்து சிலருக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. அவை:

கட்டுமானத் துறையில் உள்ளவர்கள் அல்லது அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வெளியே செல்லலாம்.

உணவு, மருந்துகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே ஷாப்பிங் செய்யலாம். பாதிக்கப்படும் மக்களுக்கு பாதுகாப்பு அல்லது உதவியை வழங்க வெளியே செல்லலாம்.

மருத்துவம் தொடர்பான பணிகளுக்கு வெளியே செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும், தொடக்கப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நாளை முதல் ஆன்லைனில் பாடம் நடத்த வேண்டும்.

மருத்துவ ரீதியாக பாதிக்கப்படக்கூடியோர் முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டும். அவர்கள் உடற்பயிற்சி அல்லது மருத்துவ சந்திப்புக்கு மட்டுமே வெளியே செல்லவேண்டும்.

அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்த ஊரடங்கு பிப்ரவரி மாதத்தின் நடுப்பகுதி வரை அமலில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *