இலங்கையில் பெளத்த மேலாதிக்க சக்திகள் தமிழ், முஸ்லிம் மக்களிடம் விடுக்கின்ற கோரிக்கை -பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்

இலங்கையில் தமிழ் மக்களையே அழித்த சிங்கள பெளத்த மேலாதிக்க சக்திகள் இலங்கையின் இறையாண்மையை காப்பதற்காக தமிழ், முஸ்லிம் மக்களிடம் கோரிக்கை விடுக்கின்ற நிலையை நாங்கள் பார்க்கின்றோம்.

இலங்கையை ஆட்சி செய்த அரசாங்கங்கள் தேசிய இனப்பிரச்சினையை தீர்த்திருப்பார்கள் ஆயின் மண்டியிட வேண்டிய அவசியம் இவர்களுக்கு ஏற்பட்டிருக்காது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று (08) மதியம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கும் போது இலங்கையினுடைய இறைமையை காப்பாற்றுவதற்காக தமிழ், முஸ்லிம் மக்களை தங்களுடன் ஒன்றிணையுமாறு பெளத்த துறவிகள் கோரிக்கை விட ஆரம்பித்திருக்கிறார்கள்.

இவர்கள் தான் இப்போது இருக்கக் கூடிய அரசாங்கத்தை பதவிக்கு கொண்டுவந்து முன்னணியில் நின்று அதற்கான வேலைகளை நடாத்தியவர்கள். இப்பொழுது இந்த அரசாங்கம் இந்த நாட்டையே ஏலம் கோரி விற்கும் நிலைக்கு போய்விட்டது என்பதும் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பிரதேசங்கள் சீனர்களின் பல்வேறுபட்ட தேவைகளுக்காக கொடுக்கப்படுகிறது.

ஒரு பக்கம் மீன்பிடி, மறுபக்கம் தென்னந் தோட்டங்கள் மாற்று மின்சார திட்டங்களை கொண்டு வருவதற்கான முயற்சிகள் இப்படி பல்வேறுபட்ட தேவைகளுக்காக நிலங்களும் தொழில்களும் சீனர்கள் வசம் போகின்றன. அது மட்டுமல்ல வடக்கில் இருக்கக் கூடிய முக்கியமான காணிகளும் சீனர்களிடம் போகவுள்ளதாக பேச்சுகள் அடிபடுகின்றன.

ஆகவே ஏற்கனவே ஹம்பாந்தோட்டை அதனைச் சுற்றியுள்ள 15 ஏக்கர் நிலப்பரப்பு கொழும்பு துறைமுக முனையம் அதனைவிட கோப் சிற்றி என பல விடயங்களை சீனாவுக்கு வழங்கும் இந்த அரசாங்கம் வடக்கிலும் பிரதேசங்களை சீனாவிடம் வழங்கக் கூடிய போக்கை காணக்கூடியதாக இருக்கிறது.

போரை நடத்துவதற்காக பல்வேறு நாடுகளிடம் இருந்து உதவிகளைப் பெற்றார்கள், சீனாவிடம் இருந்து விமானங்களைப் பெற்றார்கள், ஆயுதங்களைப் பெற்றார்கள். நிதியைப் பெற்றார்கள் இன்று அதற்கு பிரதி உபகாரமாக முழு நாட்டையுமே தாரைவார்த்து கொடுக்கின்ற துர்ப்பாக்கியமான நிலை ஏற்பட்டுள்ளது.

இப் பொழுது சிங்கள மக்கள் புத்திஜீவிகள் இந்த நாட்டை இறைவன் தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள்.

தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று இரண்டாவது சுதந்திரத்துக்காக போராடவேண்டி இருக்கிறது என்று பெளத்த துறவிகள் பேசக்கூடிய அளவுக்கு நிலைமைகள் மாறி இருக்கின்றன என்பது கண்கூடாகத் தெரிகின்றது.

இவ்வாறான சூழ்நிலையில் ஒரு பக்கம் கோரிக்கை வைக்கக்கூடிய அதே சமயம் தமிழ் மக்களுடைய பிரச்சினை தீர்ப்பதற்காக கொண்டுவரப்பட்ட அற்ப சொற்ப சலுகையான 13 ஆவது திருத்தம் மாகாணசபை முறைமையை இல்லாது ஒழிப்பதற்கான வேலையை செய்து கொண்டிருக்கிறது.

வடக்கில் 52 பாடசாலைகளை தேசிய பாடசாலையாக எடுப்பதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வைத்தியசாலைகளை தேசிய வைத்தியசாலைகளாக எடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக இந்த பெளத்த துறவிகளோ அல்லது இந்த நாட்டினுடைய இறைமையைப் பற்றி பேசுபவர்களோ இந்த நாட்டினுடைய சகல மக்களையும் சமத்துவமாக மதித்து குறைந்தபட்சம் அவர்களுக்கான உரிமைகளை கொடுத்து சமத்துவத்தை பேணுவதில் அக்கறை உள்ளவர்களாக இல்லை என்பது முக்கியமான விடயம்.

அதுமாத்திரமல்ல இன்று இருக்கக் கூடிய மோசமான நிலையைப் பற்றி பேசக்கூடிய எதிர்தரப்பில் இருக்கக் கூடிய ஐக்கிய தேசியக் கட்சியோ, சஜித் பிரேமதாஸாவின் தலைமையில் இருக்கக் கூடிய ஐக்கிய மக்கள் சக்தியோ கூட இந்த மாகாண சபைகளுடைய அதிகாரங்கள் பறிக்கப்படுகின்ற போது அல்லது வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் நிலங்களில் சிங்களவர்களை குடியேற்றுகின்ற போதோ, புதிதாக பெளத்த கோவில்கள் வருகின்ற போதோ எதிர்த்தரப்பு இன்னும் மெளனம் சாதித்துக் கொண்டே இருக்கிறது.

ஆளுந்தரப்பாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி பெளத்த மேலாதிக்க சக்திகள் தமிழ் மக்களுடைய கோரிக்கை என்றால் தூரவே நிற்கின்ற நிலைமையை நாங்கள் பார்க்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *