இலங்கை அரசின் நடவடிக்கையால் மத்திய கிழக்கு நாடுகளில் விபசார நிலைக்கு தள்ளப்படும் இலங்கைப் பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டு.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளுக்காகச் சென்ற இலங்கையர்கள் பலர் தற்போது உலகம் பூராகவும் பரவியுள்ள கொரோனா தொற்று காரணத்தால் நாடு திரும்ப முடியாதுள்ளனர். அவர்களை இலங்கைக்கு வரவழைப்பதில் அரசாங்கம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ள காரணத்தினாலும், பத்து மாதங்களுக்கு அதிகமான காலம் அவர்கள் வெளிநாடுகளிலேயே இருக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. 65 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் நாட்டிற்கு வருவதற்கு தம்மைப் பதிவு செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருந்தார்.

எவ்வாறு இருப்பினும் தமது தொழிலை இழந்து மத்திய கிழக்கு நாடுகளில் தவிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியாக வேண்டும். இவர்கள் பல்வேறு பிரச்சினைகளை மனதளவிலும் பொருளாதாரத்திலும் எதிர்கொண்டு வருகின்றனர்.

தொழிலை இழந்துள்ள காரணத்தினாலும், விசா முடிவடைந் துள்ள காரணத்தினாலும் அவர்களால் வாழக்கூட முடியாத நிலைமை உருவாகியுள்ளது. சிலர் பூங்காக்களிலும், வெற்றுக் களஞ்சியசாலைகளிலும் தங்கியுள்ளனர். இவர்களை நாட்டிற்குக் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது. விமான கடவுசீட்டுக்களின் விலையை மூன்று மடங்கு அதிகரித்துள்ளனர். எமது மக்களுக்கே இவ்வாறு செய்வது நியாயமானதா?

உக்ரேன் நாட்டிலிருந்து சலுகைகளைக் கொடுத்து சுற்றுலாப்பயணிகளை வரவழைக்க முடியும் என்றால் ஏன் எமது மக்களை வரவழைக்க முடியாது. நெருக்கடியிலுள்ள எமது மக்களின் பலவீனத்தை வியாபாரமாக்க ஜனாதிபதியைச் சுற்றி அமர்ந்துள்ள அதிகாரிகள் செயற்பட்டு வருகின்றனர்.

இலங்கைப் பிரஜைகளுக்கு நாட்டுக்கு வர முடியும். ஆனால் அதனைக் கூட அரசாங்கம் வியாபாரமாக்கி தூதரகத்தில் தம்மைப் பதிவு செய்து , பணம் செலுத்தி வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இலங்கையர்களை எதற்காக ஹோட்டல்களில் தனிமைப்படுத்த அனுப்ப வேண்டும்? அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்த முடியும்.

சுற்றுலாப்பயணிகளை நாட்டுக்குள் வரவழைத்து நாடு பூராகவும் சுற்றித்திரிய விடுகின்றனர் . வெள்ளையர்களுக்கு ஒரு சட்டமும் எமது மக்களுக்கு மோசமான சட்டமும் கையாளப்படுகின்றது.

இதேவேளை தற்போது மத்திய கிழக்கில் தொழிலை இழந்துள்ள எமது பெண்கள் செய்வதறியாது, வாழ்வதற்காக தமது உடலை விற்க வேண்டிய மோசமான நிலைமை உருவாகியுள்ளது. என்னிடம் பணம் இல்லை, அதனால் பணத்துக்காக இவ்வாறு விபசாரத்தில் ஈடுபட வேண்டியுள்ளதாக வெளிப்படையாக தமது வேதனையை ஒரு பெண் வெளிப்படுத்தியுள்ளார்.

எமது மக்களை இவ்வாறு மோசமான நிலைக்குத் தள்ளிய நீங்களெல்லாம் ஒரு ஆட்சியாளரா? இந்த நிலைக்கு எமது மக்கள் சென்றமையை எண்ணி நீங்கள் வெட்கப்படவில்லையா? அவர்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கு முறையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *