இலங்கையில் மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டவர்கள், அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்திவைப்பு

பொத்துவில் தொடக்கி பொலிகண்டி வரை மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டவர்கள், அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் பருத்தித்துறை நீதிமன்றில் 3 பொலிஸ் நிலையங்களால் பி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.ஏற்கனவே பேரணிக்கு தடைகோரி ஏ அறிக்கையூடாக பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையங்களால் தொடரப்பட்ட வழக்கிற்கு நீதிமன்று வழங்கிய தடை உத்தரவு மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தே, இந்த “பி” அறிக்கைகள் பேரணியில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளன.நீதிமன்றக் கட்டளைச் சட்டம் 55 (1), 56 2 (ஆ) ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த பி அறிக்கைகளை பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் தனித்தனியே தாக்கல் செய்துள்ளனர்.பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், சட்டத்தரணி கே.சுகாஷ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு எதிராகவே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.இந்த வழக்குகள் இன்று திறந்த மன்றில் அழைக்கப்பட்டது. பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம் , வழக்குகளை மார்ச் 29, மே 19 மற்றும் 20ஆம் திகதிகளுக்கு தவணையிட்டு ஒத்திவைத்தது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *