இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்த இங்கிலாந்து திட்டம்

ஐரோப்பிய நாடுகளிலேயே இங்கிலாந்தில் தான் அதிகப்படியான கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இருந்தும் அங்கு வரும் 19ம் தேதி முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளன.கொரோனா கட்டுப்பாடுகளை ஜூலை 19ம் தேதியுடன் முழுமையாக தளர்த்துவதற்கு எண்ணியுள்ளதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் நேற்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தொற்று உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டவர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருந்தால் சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் ஆகஸ்ட் 16ம் தேதி முதல் இந்த நடைமுறை அமுலாகும் என இங்கிலாந்தின் சுகாதார துறை செயலாளர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து போக்குவரத்துத்துறை அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் இன்று (ஜூலை 8) கூறுகையில், ’15 மாதங்களுக்குப் பின் சுற்றுலாப் பயணிகளுக்காகப் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளன. கொரோனா தொற்று மிதமாக உள்ள நாடுகளிலிருந்து வரும், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்த திட்டமிட்டு உள்ளோம்’ என்றார்.இங்கிலாந்தில் கொரோனா தொற்றினால் நேற்று மேலும் 28,773 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 37 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *