இரணைதீவிற்கு மக்கள் சென்று வருவதில் காணப்படுகின்ற கெடுபிடிகளை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கையினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார்.இன்று நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி.எம்.எஸ். சார்ள்ஸ் ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், இரணைதீவிற்கு பொது மக்கள் சென்று வருவதற்கு கடற்படையினரினால் இடையூறுகள் ஏற்படுத்தப்படுத்தப்படுவதாக சுடடிக்காட்டப்பட்டது.
இதுதொடர்பாக கடற்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர், இரணைதீவில் பொலிஸ் காவல் நிலையம் ஒன்றை அமைப்பது எனவும், அதன்பின்னர் தேவையற்ற கெடுபிடிகள் கடற்படையினரால் மேற்கொள்ளப்படாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதேவேளை, கொரோனா காரணமாக இஸ்லாமிய சகோதரர்கள் உயிரிழப்பார்களாயின், அவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடம் இல்லையென ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துரைத்துள்ள நிலையில், இன்றைய ஒருங்கிணைப்புக் குழுவிலும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது