இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.   இதையடுத்து கடந்த 24-ந்தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சிறுநீரக பிரச்சினை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்கள் எந்தவித பலனையும் அளிக்கவில்லை.

இதனால் அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்து வந்தது. தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.இந்த நிலையில் தா.பாண்டியன் இன்று காலை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது உடல் தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.அங்கு அவரது உடலுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள், கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். இன்று இரவு 7 மணி வரை அவரது உடல் அங்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு இருக்கும்.

அதன் பின்னர் சொந்த ஊரான உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலை பட்டிக்கு அவரது உடல் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு நாளை இறுதி சடங்கு நடைபெறுகிறது.தமிழக அரசியலில் பிரபலமான தலைவராக விளங்கிய தா.பாண்டியனின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *