இந்தியா சார்பில் மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் வெள்ளி வென்ற மீராபாய் சானு

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்தியா சார்பில் பளுதூக்குதல் போட்டியில் பங்கேற்றுள்ளார் மீராபாய் சானு.மீராபாய் சானு, பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றார். இந்தப் பிரிவில் அவருக்கும் சீனாவின் ஹாவு ஷிஹூயுக்கும் தங்கப் பதக்கம் வெல்வதில் போட்டி இருந்தது.117 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்துக்குப் போட்டியிட்ட மீராபாய் சானுவால், அதில் வெற்றி பெற முடியவில்லை. இதன் காரணமாக அவருக்கு வெள்ளிப் பதக்கம் மட்டுமே கிடைத்தது. டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இதுவேயாகும்.

49 கிலோ எடைப் பிரிவில் சீனாவின் ஹாவு ஷிஹூய் தங்கம் வென்றார். மீராபாய் சானுவுக்கு வெள்ளியும், இந்தோனேசியாவின் கான்டிக் விண்டி அய்ஷாவுக்கு வெண்கல பதக்கமும் கிடைத்தது.இந்த வெற்றி குறித்து ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற விளையாட்டு வீரரான அபினவ் பிந்த்ரா, ‘டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்காக முதல் பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு வாழ்த்துகள். மிகவும் உற்சாகம் அளிக்கக்கூடிய இந்த சம்பவம் இன்னும் பல தலைமுறைகளுக்கு நினைவுகூரப்படும்’ என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு பளுதூக்குதலில் கிடைக்கும் இரண்டாவது பதக்கம் ஆகும். இதற்கு முன்னர் கர்ணம் மல்லேஷ்வரி, இந்தியாவுக்காக கடந்த 2000 ஆம் ஆண்டு, 69 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார். தற்போது தான் முதன் முறையாக இந்தியா சார்பில் ஒரு வீராங்கனை பளுதூக்குதலில் வெள்ளி வெல்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *