இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட்டில் ஜோ ரூட் இரட்டை சதம் அடித்தார்

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. 13 மாதங்களுக்கு பிறகு இந்தியாவில் சர்வதேச போட்டி தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு காரணமாக இந்த போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை.100-வது டெஸ்டில் விளையாடும் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோரூட் டாஸ் வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். ரோரி பேர்ன்சும், சிப்லியும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இங்கிலாந்து அணி நிதானமாக ஆடியது. இதனால் 19.3 ஓவர்களில் அந்த அணி 50 ரன்னை தொட்டது.அந்த அணியின் தொடக்க ஜோடியை அஷ்வின் பிரித்தார். ரோரி பேர்ன்ஸ் 33 ரன்னில் அவரது பந்தில் ரி‌ஷப் பண்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 63 (23.5 ஓவர்) ஆக இருந்தது. அடுத்து வந்த லாரன்ஸ் விக்கெட்டை பும்ரா எளிதில் வீழ்த்தினார். அவர் ரன் எதுவும் எடுக்கவில்லை. 63 ரன்னில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டை இழந்தது.மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 67 ரன் எடுத்திருந்தது.மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. சிப்லி, ஜோ ரூட் அபாரமாக விளையாடினர். இவர்கள் இருவரையும் பிரிக்க இந்தியாவின் ஐந்து பந்து வீச்சாளர்களும் திணறினார்கள்.டாம் சிப்லி 159 பந்தில் அரைசதம் அடித்தார். இருவரும் 2-வது செசன் முழுவதும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். தேனீர் இடைவேளையின்போது இங்கிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருந்தது. டாம் சிப்லி 53 ரன்களுடனும், ஜோ ரூட் 45 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ஜோ ரூட் 110 பந்தில் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த பின் ஜோ ரூட் ஆட்டத்தில் வேகத்தை கூட்டினார். இதனால் இங்கிலாந்து அணியின் ரன் விகிதம் உயர ஆரம்பித்தது.ஜோரூ ரூட் சிறப்பாக விளையாடி டாம் சிப்லி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜோ ரூட் 164 பந்தில் சதம் அடித்தார். 51 ரன்னில் இருந்து 100 ரன்னைத்தொட ஜோ ரூட்டுக்கு 54 பந்துகளே தேவைப்பட்டது. 100-வது போட்டியில் சதம் அடித்து ஜோ ரூட் அசத்தினார்.கடைசி ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் சிப்லி எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அவர் 286 பந்தில் 87 ரன்கள் அடித்தார். டாம் சிப்லி – ஜோ ரூட் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது .முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 263/3 எடுத்தது . ஜோ ரூட் 128 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.இரண்டாம் நாளான இன்றும் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜோ ரூட் இரட்டைச் சதம் கடந்தார். இதன்மூலம் பல்வேறு உலக சாதனைகளை முறியடித்துள்ளார். 100வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். சிக்சர் விளாசி இரட்டை சதம் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.அத்துடன் 100வது டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இன்சமான் உல் ஹக்கின் உலக சாதனையையும் ஜோ ரூட் முறியடித்தார்.இன்சமாம் உல் ஹக் 2005ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 184 ரன்கள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது.இதேபோல் 100 டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை ஜோ ரூட் முறியடித்துள்ளார். சச்சின் 100 போட்டிகளில் 8,405 ரன்கள் எடுத்திருந்தார். ஜோ ரூட் 8,458 ரன்கள் எடுத்துள்ளார்.இப்போட்டியில் ஜோ ரூட் 218 ரன்கள் குவித்த நிலையில், நதீம் பந்தில் எல்பிடபுள்யூ ஆனார். அப்போது இங்கிலாந்து அணியின் ஸ்கோர், 6 விக்கெட் இழப்பிற்கு 477 ரன்கள் என வலுவான நிலையில் இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *