இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்குடையிலான 2-வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் எடுத்திருந்தது.அபாரமாக விளையாடிய ரோகித் சர்மா, 161 ரன்கள் குவித்தார். ரகானே 67 ரன்கள் சேர்த்தார்.
இந்நிலையில் இன்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டை இழந்தது. அக்சர் பட்டேல் 5 ரன்களிலும், இஷாந்த் சர்மா ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆகினர். அரை சதம் கடந்த ரிஷப் பன்ட், தொடர்ந்து நிதானமாக ஆடினார். ஆனால் மறுமுனையில் விக்கெட்டுகள் நிலைக்கவில்லை. இதனால் இந்திய அணி 329 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரிஷப் பன்ட் 58 ரன்களுடன் களத்தில் இருந்தார்.பின்னர் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை விளையாட தொடங்கியது. முதல் ஓவரிலேயே ரோரி பேர்ன்ஸை இஷாந்த் சர்மா சாய்த்தார். அதன்பின் அஷ்வின், அக்சார் பட்டேல் சுழற்பந்து வீச்சில் அசத்த இங்கிலாந்து வரிசையாக விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தது.
அஷ்வின் அபாரமாக பந்து வீசி ஐந்து விக்கெட் சாய்க்க இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 59.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 134 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அக்சார் பட்டேல், இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.195 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது தற்போது வரை இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 54 ரன்கள் எடுத்துள்ளது.ரோஹித் சர்மாவும் (25 ரன்கள் ) புஜாராவும்(7 ரன்கள் ) விளையாடி வருகின்றனர்.