மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழையால் வியாழக்கிழமை மாலை பல மாவட்டங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.மகாராஷ்டிராவின் கடலோர மாவட்டமான ராய்காட்டில் மகாத் தெஹ்சில் மற்றும் அதனை சுற்றி நிலச்சரிவு ஏற்பட்டது. இதற்கிடையே கோலாப்பூர் மாவட்டத்தில் 47 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. பலத்த மழை காரணமாக சாலைகள் நீரில் மூழ்கின.தொடர்ந்து மீட்பு பணிக்காக 2 கடற்படை மீட்புக் குழுக்கள் ராய்காட் மாவட்டத்தில் உள்ள மஹாத்துக்கும், 5 குழுக்கள் ரத்னகிரி மாவட்டத்தில் சிப்லூனுக்கும் சென்றுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படை (என்.டி.ஆர்.எஃப்) மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற உதவி வருகிறது.
ராய்காட் மாவட்டம் மகாத் தெஹ்சிலில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியானது.அருகில் உள்ள பகுதியில் மூன்று வெவ்வேறு நிலச்சரிவு சம்பவங்கள் நடந்தன. மொத்தம் 32 உடல்கள் ஓரிடத்தில் இருந்தும், 4 உடல்கள் மற்ற இடங்களில் இருந்தும் மீட்கப்பட்டுள்ளன.
மும்பை மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.