இந்தியாவில் கடந்த 16ம் திகதி கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.இந்தியா முழுவதும் உள்ள 3006 மையங்களில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்றது . தமிழத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது .நாடு முழுவதும் முதல் நாளில் சுமார் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி அன்று போடப்பட்டது .இந்த மாபெரும் தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி காணொளி வாயிலாக துவக்கி வைத்தார் , முதலில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதல் தடுப்பூசி துப்புரவு பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது. அதன்பின்னர் சுகாதார பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் என மற்றவர்களுக்கு செலுத்தப்பட்டது.இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த 52 வயது நபருக்கு நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர் நேற்று மாலை மரணம் அடைந்தார். டாக்டர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனை செய்தது. அதில் கொரோனா தடுப்பூசி தொடர்பான விளைவுகளால் மரணம் அடையவில்லை எனத் தெரியவந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.மற்றொருவர் கர்நாடக மாநிலம் பெல்லாரியை சேர்ந்தவர். இவருக்கு 43 வயது. நேற்று முன்தினம் தடுப்பூசி போட்டுக்கொண்ட இவர், இன்று மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்முடிவில் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என அங்கிருந்து வரும் செய்திகல் தெரிவிக்கின்றன.