இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனகா நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசி உருவாக்கியுள்ளது. அந்த தடுப்பூசி இங்கிலாந்தில் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் மூலக்கூறுகளை கொண்டு அஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது.
கோவிஷீல்டு என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி பரிசோதனையில் நல்ல பயன் அளித்ததாக சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தெரிவித்தது.
மேலும், தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதிக்கும்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் சீரம் இன்ஸ்டிடியூட் விண்ணப்பித்தது.
இந்த விண்ணப்பம் தொடர்பாக மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் நிபுணர் குழு நேற்று ஆலோசனை நடத்தியது.
இதில், கோவிஷீல்டு தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரஅனுமதிக்கும்படி மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்புக்கு நிபுணர் குழு பரிந்துரை வழங்கியது.
இந்நிலையில், அவசர கால பயன்பாட்டிற்கு கோவிஷீல்டு தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் இன்று தெரிவித்துள்ளார்.