இந்தியாவில் கொரோனா தாண்டவம் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று, 1027 பேர் உயிரிழப்பு…

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களாக புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. தினசரி பாதிப்பு 1.8 லட்சமாக உயர்ந்துள்ளது. அத்துடன், கொரோனாவால் ஏற்படும் மரணங்களும் அதிகரிக்கின்றன. இதனால் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதேசமயம் தடுப்பூசி போடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. பாதிப்புகளுக்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,38,73,825 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,84,372 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் 1,027 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 1,72,085 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1,23,36,036 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 82,339 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 13,65,704 பேர் சிகிச்சையில் உள்ளனர். நாடு முழுவதும் நேற்று வரை 11,11,79,578 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *