அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக நேற்று தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த முடிவால் வரும் தேர்தலில் தேமுதிக தனித்து நிற்குமா? அல்லது வேறு யாருடனேனும் கூட்டணி அமைக்குமா என்பது நாளை தெரியவரும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடலூர் பண்ட்ருட்டியில் கட்சிக் கூட்டத்தில் தேமுதிக விஜய பிரபாகரன் பேசுகையில், ”இதுவரை சாணக்கியனாக இருந்தது போதும். இனி தேமுதிக சத்ரியனாக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. எடப்பாடி தொகுதியில் அதிமுக மண்ணைக் கவ்வும். சட்டப்பேரவை தொகுதியில் அதிமுகவுக்குத் தக்க பதிலடி கொடுப்போம். எனக்கு ஆணவம் இல்லை. ஆனால் உங்கள் ஆணவத்தைத்தான் மக்கள் அடக்கப் போகிறார்கள். நிறைய நடந்துள்ளது, சொன்னால் கலவரம் ஆகிவிடும். உங்களைப் போன்று காசுக்கு மாரடிக்கும் கூட்டம் நாங்கள் இல்லை. நாங்கள் கேட்கிற சீட் கிடைக்கவில்லை என்றால் ஒவ்வொரு தொகுதியிலும் சீட் பறிக்கப்படும். அதிமுகவிற்கு இனி இறங்குமுகம்தான். அதிமுக தலைமைதான் சரியில்லை. இதுவரைக்கும் விஜயகாந்தை பாத்துருப்பீங்க, பிரேமலதாவ பாத்துருப்பீங்க. இனி அவங்க ரெண்டு பேரையும் கலந்து விஜயபிரபாகரன பார்ப்பீர்கள்” என்றார்.
