இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் இந்திய அணி அபார வெற்றி

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்குடையிலான 2-வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் எடுத்திருந்தது.அபாரமாக விளையாடிய ரோகித் சர்மா, 161 ரன்கள் குவித்தார். ரகானே 67 ரன்கள் சேர்த்தார்.இந்நிலையில் இன்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டை இழந்தது. அக்சர் பட்டேல் 5 ரன்களிலும், இஷாந்த் சர்மா ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆகினர். அரை சதம் கடந்த ரிஷப் பன்ட், தொடர்ந்து நிதானமாக ஆடினார். ஆனால் மறுமுனையில் விக்கெட்டுகள் நிலைக்கவில்லை. இதனால் இந்திய அணி 329 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரிஷப் பன்ட் 58 ரன்களுடன் களத்தில் இருந்தார்.பின்னர் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை விளையாட தொடங்கியது. முதல் ஓவரிலேயே ரோரி பேர்ன்ஸை இஷாந்த் சர்மா சாய்த்தார். அதன்பின் அஷ்வின், அக்சார் பட்டேல் சுழற்பந்து வீச்சில் அசத்த இங்கிலாந்து வரிசையாக விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தது.அஷ்வின் அபாரமாக பந்து வீசி ஐந்து விக்கெட் சாய்க்க இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 59.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 134 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அக்சார் பட்டேல், இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.195 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் 2-வது இன்னிங்சில் திணறினார்கள். ஒரு கட்டத்தில் இந்தியா 106 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது.7-வது விக்கெட்டுக்கு விராட் கோலி உடன் அஷ்வின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. விராட் கோலி அரைசதம் அடித்து 62 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 96 ரன்கள் சேர்த்தது.மறுமுனையில் அஷ்வின் அபாரமாக விளையாடி 134 பந்தில் சதம் விளாசினார். சர்வதேச கிரிக்கெட்டில் அஷ்வினின் ஐந்தாவது சதம் இதுவாகும்.தொடர்ந்து விளையாடிய அவர் 106 ரன்னில் ஆட்டமிழக்க இந்தியா 2-வது இன்னிங்சில் 286 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.ஒட்டுமொத்தமாக இந்தியா 481 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்து திணறியது. இன்று 4- ஆம் நாள் ஆட்டம் துவங்கியதும் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இந்திய அணியின் அக்‌ஷர் படேல், அஸ்வின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், இங்கிலாந்து வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். 54.2 ஓவர்கள் தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 164 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *