ஆஸ்திரேலியாவில் பேஸ்புக்கில் செய்திகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கிக் கொள்வதாக பேஸ்புக் நிறுவனம் நேற்று அறிவிப்பு

ஆஸ்திரேலிய நாட்டின் நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் செய்தி ஊடக பேர மசோதா ஒன்று சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்த மசோதா, இணையவழி சமூக ஊடக நிறுவனங்கள், தங்களுக்கு வரும் வருமானத்தில் ஒரு பகுதியை செய்தி ஊடக நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதை கட்டாயம் ஆக்குகிறது.

இந்நிலையில் இதற்கு உடன்படாமல்தான் ‘பேஸ்புக்’ சமூக ஊடக நிறுவனம், ஆஸ்திரேலியாவில் ‘பேஸ்புக்’கில் செய்திகளுக்கு அதிரடியாக தடை விதித்து விட்டது.ஆஸ்திரேலியாவில் ‘பேஸ்புக்’ சமூக ஊடகத்தில் உள்ளூர் மற்றும் உலக செய்திகளை மக்கள் வாசித்து வந்தனர். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் செய்திகளை பார்ப்பதற்காக ‘பேஸ்புக்’ பக்கங்களை திறந்தபோது அவற்றில் செய்திகள் இல்லாமல் மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.‘பேஸ்புக்’ சமூக ஊடக நிறுவனம், நேற்று எந்தவித முன்அறிவிப்பும் இன்றி ஆஸ்திரேலியாவில் செய்திகளை ‘பேஸ்புக்’கில் தடை செய்து விட்டது.

வெளிநாடுகளில் வாழ்கிற ஆஸ்திரேலிய மக்களும் கூட ‘பேஸ்புக்’ மூலம் தங்கள் நாட்டு செய்திகளையோ, தாங்கள் வாழும் நாட்டு செய்திகளையோ பார்க்க முடியாமல் போயினர்.அது மட்டுமின்றி, ஆஸ்திரேலிய அரசின் பல்வேறு அரசு சுகாதார சேவை மற்றும் அவசர கால பக்கங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. வானிலை செய்தி பக்கங்களைக்கூட ‘பேஸ்புக்’ தடை செய்திருப்பது ஆஸ்திரேலிய அரசையும், மக்களையும் ஒரு சேர அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

‘பேஸ்புக்’கின் இந்த நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் கண்டனம் தெரிவித்திருந்தார் இதைத்தொடர்ந்து பேஸ்புக் நிறுவனமும் ஆஸ்திரேலியா அரசும் இந்த விவகாரம் தொடர்பாக தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதில் பேஸ்புக் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டுவர ஆஸ்திரேலிய அரசு ஒப்புக்கொண்டது.

இதையடுத்து ஆஸ்திரேலியாவில் பேஸ்புக்கில் செய்திகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் நேற்று அறிவித்தது. பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்பட்டுள்ளதால், ஆஸ்திரேலியாவில் வழக்கம்போல் பொதுநலன் சார்ந்த ஊடக செய்திகள் இனி பேஸ்புக்கில் வெளியாகும் என பேஸ்புக்கின் ஆஸ்திரேலிய பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *