ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கான அமெரிக்காவின் ஆதரவு தொடரும் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசுக்கும் உள்நாட்டு போர் நடக்கிறது.இதில் ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு அமெரிக்க படைகள் பக்கபலமாக இருந்து வந்த நிலையில், தலிபான்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு இணங்க அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி வருகின்றன. ஆகஸ்டு 31-ம் தேதிக்குள் அனைத்துப் படையினரும் வெளியேறி விடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் அங்கு தலிபான்களின் கை மீண்டும் ஓங்கியுள்ளது. அரசு படைகளுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ள தலிபான்கள் நாட்டின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றி வருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தானில் அசாதாரண சூழ்நிலை நீடிக்கிறது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தலிபான்களின் தற்போதைய தாக்குதல் சமாதான பேச்சுவார்த்தைகளை ஆதரிப்பதற்கான தங்களின் கூற்றுக்கு முரணானது என இருநாட்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.அதையடுத்து, ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கான அமெரிக்காவின் ஆதரவு தொடரும் என அஷ்ரப் கனியிடம் அதிபர் ஜோ பைடன் உறுதி அளித்தார்.இதுதொடர்பாக அதிபர் அஷ்ரப் கனி கூறுகையில், ‘‘அதிபர் ஜோ பைடன் உடனான தொலைபேசி உரையாடலில் இரு நாடுகளுக்கும் இடையிலான வளர்ந்து வரும் தொடர்ச்சியான உறவை பற்றி நாங்கள் விவாதித்தோம். ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவு தொடரும் என அதிபர் ஜோ பைடன் எனக்கு உறுதியளித்தார். அவர்கள் ஆப்கானிஸ்தானை பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது’’ என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *