ஆப்கானிஸ்தான் படை மீது அடையாள தெரியாத நபர்கள் துப்பாக்கி சூடு காபூல் விமான நிலையத்தில் பதற்றம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்குமோ? என அஞ்சும் மக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி வருகின்றனர். அவர்கள் வெளிநாட்டிற்குச் செல்ல விமான வழி ஒன்றே தீர்வு என்பதால், காபூல் சர்வதேச விமான நிலையத்திற்கு படையெடுத்து வருகிறார்கள்.

அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் அவர்களுடைய நாட்டினரை அழைத்துச் செல்வதுடன் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களையும் அழைத்துச் செல்கிறது. ஆயிரக்கணக்கானோர் கூடியுள்ளதால் காபூல் விமான நிலையத்தில் அசாதாரண சூழ்நிலையே நிலவுகிறது. கைக்குழந்தைகளுடன் காத்திருக்கும் பெண்கள் குடிக்க நீர், சாப்பிட உணவு இல்லாமல் தவித்து வருகிறார்கள். நேற்று கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அமெரிக்க படைகள், நேட்டோ படைகள் காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தான் படைகளும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளது.இன்று காலை திடீரென விமான நிலையத்தின் வடக்கு வாசல் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் ஆப்கானிஸ்தான் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். ஆப்கானிஸ்தான் வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இதில் ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் காபூல் விமான நிலையத்தில் கூடுதல் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது.துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும் சுதாரித்துக் கொண்ட அமெரிக்க மற்றும் ஜெர்மனி வீரர்கள் கூட்டாக இணைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்தத் தகவலை ஜெர்மனி ராணுவம் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *