ஆப்கானிஸ்தானில் பெண் நீதிபதிகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தகவல்

ஆப்கானிஸ்தானை கைப்பற்றி உள்ள தலிபான்கள் புதிய ஆட்சி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புதிய அரசு குறித்து நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.தலிபான்களின் முந்தைய ஆட்சிக்காலத்தில் இருந்ததுபோன்று இப்போதும் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்படலாம் என்றும், பெரும்பாலான பணிகளில் பெண்களுக்கு தடை விதிக்கப்படலாம் என்றும் அச்சம் எழுந்துள்ளது. ஆனால், பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என தலிபான் அமைப்பு கூறி உள்ளது. மேற்கொண்டு எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள சிறைக் கைதிகளை தலிபான்கள் விடுவித்துள்ளனர். அவர்களால், ஆப்கானிஸ்தானில் உள்ள சுமார் 250 பெண் நீதிபதிகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் நீதித்துறையில் பணிபுரியும் பெண்களை பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளனர். ஜனவரி மாதம் உச்ச நீதிமன்ற பெண் நீதிபதிகள் 2 பேரை சுட்டுக் கொன்றனர். இப்போது நாடு முழுவதும் கைதிகள் தலிபான் அமைப்பால் விடுதலை செய்யப்பட்டிருப்பதால், பெண் நீதிபதிகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக நாட்டை விட்டு வெளியேறிய பெண் நீதிபதி ஒருவர் கூறி உள்ளார்.‘காபூலில் எனது வீட்டிற்கு தலிபான் அமைப்பைச் சேர்ந்த நான்கைந்து பேர் சென்று என்னைப் பற்றி விசாரித்துள்ளனர். இங்கிருந்த பெண் நீதிபதி எங்கே? என்று கேட்டுள்ளனர். அவர்கள் என்னால் சிறையில் அடைக்கப்பட்டவர்கள். இதேபோல் ஆப்கானிஸ்தானில் தற்போது இருக்கும் பெண் நீதிபதிகளிடம் தொடர்பில் இருக்கிறேன். அவர்கள், தங்களை மீட்காவிட்டால் உயிருக்கு நேரடி ஆபத்து இருப்பதாக என்னிடம் கூறுகின்றனர்’ என அந்த நீதிபதி தெரிவித்துள்ளார்.

சர்வதேச பெண் நீதிபதிகள் சங்கத்தில் உள்ள சக நீதிபதிகள் மற்றும் மனித உரிமைகள் அமைப்பினரின் உதவியுடன் சமீபத்தில் வெளியேறிய ஆப்கானிஸ்தான் பெண் நீதிபதிகளில் இவரும் ஒருவர். மற்ற நீதிபதிகளும் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளனர். அவர்களை வெளியேற்றுவதற்காக மனித உரிமை ஆர்வலர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *