அமெரிக்காவை கிண்டல் செய்த சீனா

சீனாவில் உள்ள வுகான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் முதன்முதலாக பரவியது. அங்குள்ள இறைச்சி மார்க்கெட்டில் இருந்து தான் நோய் பரவியதாக கூறப்பட்டது.வுகான் நகரில் சீன அரசின் உயிரியல் ஆய்வுக்கூடம் உள்ளது. இங்கு உயிரி ஆயுதமாக பயன்படுத்துவதற்காக கிருமிகளை உருவாக்கியதாகவும், அதில் ஒரு கிருமிதான் கொரோனா வைரஸ் என்றும் தகவல் பரவியது.

இதை சீனா மறுத்தது. ஆனாலும் அதுபற்றி ஆய்வு செய்வதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு சீனா சென்றது. ஆனால் ஆய்வகத்தில் இருந்து பரவியதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.இந்தநிலையில் அமெரிக்காவில் உள்ள வால்ஸ் ஸ்டிரீட் ஜேர்னல் என்ற பத்திரிகை ஒரு செய்தி வெளியிட்டது. சீனாவில் கொரோனா பரவியதாக தகவல் வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக சீன ஆய்வுக்கூடத்தில் பணியாற்றிய 3 விஞ்ஞானிகளுக்கு மர்ம நோய் ஏற்பட்டது.அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் நோய் குணமாகவில்லை. அதன் பிறகு சோதனை நடத்தியதில், புதிய வகை வைரஸ் அவர்களை தாக்கியது கண்டு பிடிக்கப்பட்டது. அதுதான் கொரோனா வைரஸ் என்று அந்த பத்திரிகை கூறி உள்ளது. இதை சீனா உடனடியாக மறுத்தது. அமெரிக்க தரப்பில் இருந்து தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்று குற்றம் சாட்டியது.

இதற்கிடையே கொரோனா வைரஸ் சீன ஆய்வுக்கூடத்தில் இருந்து தான் பரவியதா என்பதை கண்டுபிடித்துத் தரும்படி அமெரிக்க உளவுத்துறைக்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.90 நாட்களுக்குள் இது சம்பந்தமான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.ஜோபைடனின் உத்தரவை கிண்டலடிக்கும் வகையில் சீனா கருத்து வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ‌ஷஹோ லிஜியன் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘அமெரிக்காவின் உளவுத்துறை வரலாறு பற்றி எங்களுக்கு தெரியும். சதாம் உசேன் காலத்தில் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை கூறியது. ஆனால் அங்கு ஒன்றுமே இல்லை என்பது போரின் முடிவுக்கு பிறகு தெரிய வந்தது’’ என்று கிண்டலாக கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *