அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வரலாறு காணாத பனிப்பொழிவு நிலவி வருகிறது. அங்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு மிக மோசமான அளவிற்கு குறைந்த பட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.இந்த வாரத்தில் அங்கு குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 18 டிகிரி செல்சியஸ் வரை இறங்கி போனதால் மக்கள் குளிரில் உறைந்து போயுள்ளனர். வீடுகள், கார்கள், சாலைகள், மரங்கள் என அனைத்தும் உறை பனிக்குள் மூழ்கி கிடக்கின்றன. நீர்வீழ்ச்சிகளும் பனி சிற்பங்களாக உறைந்து காணப்படுகின்றன.
குளிர் அதிகரிப்பதால் மின்சார தேவை அதிகரித்து உள்ளது. ஆனால், பனிப்பொழிவால் தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தி செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே, கடந்த நாட்களாக சுமார் 34 லட்சம் மக்கள் மின்சாரமின்றி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மின்தடை காரணமாக பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கி உள்ளன. சாலைகளில் பனிக்கட்டிகளை அகற்றி போக்குவரத்தை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.கடும் குளிருக்கு இதுவரை 21 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்சாஸ் மாநிலத்திற்கு அவசர உதவிகளை உடனடியாக வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்கனவே உறுதியளித்துள்ளார். வெள்ளிக்கிழமை நிலவரப்படி டெக்சாஸ் மாகாணத்தில் 1 லட்சத்து 80 ஆயிரம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.
மேலும் உறைபனி காரணமாக குடிநீர் வழங்கல் ஸ்தம்பித்துப் போயுள்ளது.டெக்சாஸ் மாகாணத்தின் மொத்த மக்கள் தொகையில் பாதி அளவுக்கு அதாவது ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை.இந்தநிலையில் டெக்சாஸ் மாகாணத்தை பேரிடர் மாகாணமாக ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று அறிவித்தார். இதன் மூலம் அந்த மாகாணத்துக்கு கூடுதலாக நிதி ஒதுக்கி நிவாரண பணிகளை மேற்கொள்ள முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் டெக்சாஸ் மாகாணத்துக்கு நேரடியாக சென்று ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.