சிரியாவில் கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.உள்நாட்டு போர் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் சிரியாவின் வடக்கு பகுதிகளில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர்.இந்தநிலையில் சிரியாவின் அல் ஹசாக்கா நகரில் உள்ள அல் ஹவுல் அகதிகள் முகாமில் நேற்று முன்தினம் இரவு திடீரென பயங்கர தீ விபத்து நேரிட்டது. முகாமில் உள்ள ஒரு குடிலில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ பிடித்ததாக தெரிகிறது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த குடில்களுக்கும் பரவியது.
இதையடுத்து உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. ஆனால் அதற்குள் தீயின் கோரப்பிடியில் சிக்கி ஒரு பச்சிளம் குழந்தை உட்பட 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர். ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.