கலவரம் வெடித்ததை தொடர்ந்து இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்‌சே ராஜினாமா

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. ராஜபக்சே குடும்பத்தினர் தவறான முடிவுகளே இந்த நிலைக்கு காரணம் என கூறி எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி ஒரு மாதமாக தெருமுனை போராட்டங்கள் நடந்து வருகின்றன.

போராட்டம் தீவிரமடைந்த நிலையில் இலங்கையில் நெருக்கடி நிலையை அதிபர் கோத்தபய ராஜபக்சே பிறப்பித்தார். இதனால் போராட்டக்காரர்களை பாதுகாப்பு படையினர் ஒடுக்கும் நடவடிக்கையில் இறங்கினர். எனினும் மக்கள் போராட்டம் ஆங்காங்கே தீவிரமாக நடைபெறுகிறது.இன்று மதியம் கொழும்புவில் உள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சே வீட்டின் முன்பு இன்று ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர்.இதேபோல் பிரதமரின் ஆதரவாளர்களும் நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டு, பிரதமர் பதவி விலக வேண்டாம் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, மகிந்தவின் ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் போராட்டக்காரர்களை மகிந்த ஆதரவாளர்கள் தாக்கினர். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவையும் தாக்க முயன்றதால் பெரும் பதற்றம் உருவானது. போலீசார், மகிந்த ஆதரவாளர்களின் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து கலைத்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கும் வகையில், கொழும்புவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்பு இலங்கை முழுவதுமே ஊரடங்கை அமல்படுத்து அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டது. கொழும்பில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்‌ஷே விலகி உள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுப்பி உள்ளார். மக்களின் நன்மைக்காக எந்த தியாகத்தை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாக அவர் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவர் பதவி விலகியிருக்கிறார். இதேபோல் இரண்டு கேபினட் மந்திரிகளும் பதவி விலகியதாக அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *