இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி பார்ல் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 287 ரன்களை எடுத்தது. ரிஷப் பண்ட் 85 ரன்னும், கே.எல்.ராகுல் 55 ரன்னும், ஷர்துல் தாக்கூர் 40 ரன்னும் எடுத்தனர்.இதையடுத்து, 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மலானும், டி காக்கும் இறங்கினர்.

தொடக்கம் முதல் டி காக் அதிரடியாக ஆடினார். இந்திய பவுலர்கள் இந்த ஜோடியை எளிதில் பிரிக்க முடியவில்லை. இருவரும் அரை சதம் கடந்தனர். முதல் விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்த நிலையில், டி காக் 78 ரன்னில் ஆட்டமிழந்தார்.சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மலான் 91 ரன்னில் வெளியேறினார். அப்போது தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் பவுமா 35 ரன்னில் அவுட்டானார்.

அடுத்து களம் இறங்கிய மார்கிரமும், வான் டெர் டுசனும் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். மார்கிராம் 37 ரன்னுடனும், வான் டெர் டுசன் 37 ரன்னுடனும் அவுட்டாகாமல் உள்ளனர்.இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 48.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 288 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *