மாநிலத்துக்கு எதெல்லாம் தேவை. எதெல்லாம் தேவை இல்லை என்பதை பிரதமர் மோடிக்கு வகுப்பெடுத்த ஒரே முதல்-அமைச்சர் நம் முதல்வர்- உதயநிதி ஸ்டாலின்

கலைஞர் 99 கருத்தரங்கம் மற்றும் திராவிட மாடல் பயிற்சி பாசறை தொடக்க விழா சென்னையில் நடந்தது. இக்கருத்தரங்களில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசியதாவது:- கலைஞர் இன்னும் நம்முடனேயே இருக்கிறார் என்ற எண்ணம் தான் எனக்கு உள்ளது.
அவரின் எண்ணங்கள் தான் நம்மை எல்லாம் வழிநடத்தி செல்வதாக உணர்கிறேன். ஒரு தாத்தாவாக அவர் எங்களுக்கு நேரம் தந்ததை விட ஒரு தலைவராக நம் அனைவருக்காகவும் நேரம் ஒதுக்கி தந்திருக்கிறார்.

மிகப்பெரிய ஆளுமைகள் தொடங்கி சாமானிய மனிதர்கள் வரை எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் தன்னுடைய நேரத்தை ஒதுக்கித்தந்துள்ளார்.
பல்வேறு துறையை சேர்ந்த ஆளுமைகளுடன், எளிய மக்களுடன் அவர் நேரடியாக உரையாடி இருக்கிறார். அவர்களுக்காக தன் வாழ்நாளின் பெரும்பகுதியை செலவழித்திருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய விஷயம். இந்த சந்திப்புகள், உரையாடல்கள் தான் அவரை ஏகப்பட்ட சமூக நீதித் திட்டங்களை தீட்ட வைத்தன. அதன் மூலமாக கோடிக்கணக்கான தமிழக மக்களின் வாழ்வில் ஒன்றிணைந்துள்ளார்.

பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் போன்றோரின் எழுத்துகள், சாதனைகள் அனைத்தும் நம் கையில் உள்ளன. கூடுதலாக திராவிட மாடல் ஆட்சியை நடத்திக்கொண்டு இருக்கும் நம் தலைவரின் சாதனைகளும் உள்ளன. நம் கொள்கைகளை, நம் சாதனைகளை மக்கள் மொழியில் அவர்களிடம் கொண்டு சேர்ப்பது மட்டும் தான் நம் வேலை. இது பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் போன்றோர் உருவாக்கிய திராவிட பூமி. நம் முதல்-அமைச்சர் வழிநடத்தும் சுயமரியாதை மண் என்பதை தொடர்ந்து காக்கும் வகையில் நம் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று கூறி இந்த பாசறை கூட்டத்தையும், இந்த கருத்தரங்கையும் தொடங்கி வைக்கும் வாய்ப்பை வழங்கிய முதல்-அமைச்சர் கழக தலைவருக்கு நன்றி. அது என்ன திராவிட மாடல் ஆட்சி. அதற்கு சிறிய விளக்கம் மட்டும் சொல்லுங்கள் என்று பலபேர் கேட்கிறார்கள். 10 நாட்கள் முன்பு நம் பிரதமர் சென்னை வந்திருந்தார்.

அவரை மேடையில் வைத்துக்கொண்டே இது தான் திராவிட மாடல் ஆட்சி, இதுதான் மாநில சுயாட்சி என்று மோடிக்கே தைரியமாக வகுப்பெடுத்தவர் தான் நம் முதல்-அமைச்சர். அதேபோல் நம் மாநிலத்துக்கு எதெல்லாம் தேவை. எதெல்லாம் தேவை இல்லை என்பதை அவருக்கு வகுப்பெடுத்த இந்தியாவிலேயே ஒரே முதல்-அமைச்சர் என்றால் அது நம் கலைஞர் வழியில் வந்த நம் தலைவர் தான். இந்தியாவிலேயே நம்பர் ஒன் முதல்-அமைச்சர் என்று பெயர் எடுத்திருக்கிறார். நான் நம்பர் ஒன் முதல்-அமைச்சராக இருப்பது போதாது. தமிழ்நாட்டை நம்பர் ஒன் மாநிலமாக மாற்ற வேண்டும். அதற்காக தொடர்ந்து உழைப்பேன் என்று தலைவர் சொல்லி இருக்கிறார். அதற்காக அனைத்து அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து உழைக்கிறார்கள். இளைஞர் அணி நிர்வாகிகளாகிய நாம் நம் பணிகளை இவர்களோடு ஒருங்கிணைந்து நம் கழக பணிகளை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *