பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து 4 நாட்களுக்குள் தமிழக ஆளுநர் முடிவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கோரி, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இத்தீர்மானம் குறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார். எனவே, தன்னை விடுவிக்க உத்தரவிடுமாறு ஆளுநருக்கு அறிவுறுத்தக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார்.இந்த மனு மீதான இறுதிக்கட்ட விசாரணை, நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், அப்துல் நசீர் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் நேற்று தொடங்கியது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜ், பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பாக குடியரசுத் தலைவர் தான் முடிவுவெடுக்க வேண்டும் என வாதிட்டார்.இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் முடிவெடுப்பார் என தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கின் அடுத்த விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *