புத்தாண்டு முதல் தமிழகத்தில் அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும் – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

எதிர்வரும் புத்தாண்டு முதல் தமிழகத்தில் அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும் என கடந்த செப்டம்பர் 9-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.இந்நிலையில் இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்குவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆணை பிறப்பிட்டுள்ளார்.தற்போது 17 சதவிகிதமாக வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி 14 சதவீதம் உயர்த்தப்பட்டு 31 சதவிகிதமாக வழங்கப்படவுள்ளது.

மேலும் சி மற்றும் டி பிரிவுப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட ரூ.8894 கோடி ஒதுக்கீடு செய்யவும் உத்தரவிட்டுள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வின் காரணமாக, அரசுக்கு ஆண்டொன்றிற்கு ரூ.8724 கோடி வரை கூடுதல் செலவினம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பொங்கல் பரிசாக சி மற்றும் டி பிரிவுப் பணியாளர்களுக்கு ரூ.3000, ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500, சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.1000, முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சிறப்பு ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 வழங்கிடவும் ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அரசுக்கு ரூ.69.56 கோடி ரூபாய் வரை செலவினம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *