சீனாவில் மீண்டும் கொரோனா பரவல்- சியான் நகரில் முழு ஊரடங்கு

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ந் தேதி குளிர்கால ஒலிம்பிக் போட்டி சீனாவில் தொடங்க இருக்கிறது. இது பிப்ரவரி மாதம் 20-ந் தேதி முடிகிறது. இதற்கான ஏற்பாடுகளை அங்குள்ள ஜின்பிங் அரசு தீவிரமாக செய்து வருகிறது. ஆனால் அதற்கு ஒரு பெருத்த சோதனை ஏற்பட்டுள்ளது.இந்த தருணத்தில் சீன நாட்டில் மறுபடியும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கொஞ்சம் தீவிரம் காட்டத்தொடங்கி இருக்கிறது. இது ஜின்பிங் அரசுக்கு தலைவலியாக மாறி இருக்கிறது.

சீனாவில் தற்போது பரவுவது கொரோனாவா அல்லது உருமாறிய ஒமைக்ரானா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சீனாவில் உள்ள சியான் நகரில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஒரு கோடியே 30 லட்சம் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்டது. அப்போது, கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்தது.சீன தலைநகர் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஷாங்சி மாகாணத்தின் தலைநகரான சியானில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால், தொற்று பரவலை தடுக்க சியான் நகரில் புதன்கிழமை இரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *