சரண் அடைந்த ஆப்கான் முன்னாள் படையினர் 47 பேரை தலிபான்கள் கொன்றுள்ள நிலையில் 22 நாடுகள் கூட்டறிக்கை வெளியீடு

ஆப்கானிஸ்தான், கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி, தலிபான்கள் கைக்கு சென்று விட்டது. அது முதல் கொண்டு அங்கு தலிபான்களின் அதிகாரம் கொடி கட்டிப்பறக்கிறது.அங்கு ஆப்கானிஸ்தான் முன்னாள் படை வீரர்களை தலிபான்கள் இப்போது குறி வைத்து கொல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆகஸ்டு 15 -ந் தேதி முதல் அக்டோபர் 31 -ந் தேதி இடையே மட்டும் தங்களிடம் சரண் அடைந்த ஆப்கான் முன்னாள் படையினர் 47 பேரை தலிபான்கள் கொன்றுள்ளதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

இதை அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் கண்டித்துள்ளன. இதையொட்டி 22 நாடுகள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அதில் தலிபான்கள் அரசு, முந்தைய அரசுக்கோ அல்லது அதன் பாதுகாப்பு படை வீரர்களுக்கோ தீங்கு விளைவிக்கக்கூடாது என்ற உறுதிமொழியை தலிபான்கள் அரசு நிர்வாகம் மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.அதில், “ஆப்கானிஸ்தான் முன்னாள் படைவீரர்கள் கொல்லப்படுவது, காணாமல் போகச் செய்வது போன்ற தகவல்களால் மிகவும் கவலை அடைந்துள்ளோம்” என கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா தலைமையில் இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் மற்றும் 19 நாடுகள் இந்த கூட்டறிக்கையில் கையெழுத்து போட்டுள்ளன.அந்த கூட்டறிக்கையின் முடிவில், தலிபான்களை அவர்களின் செயல்களைக் கொண்டு நாங்கள் தொடர்ந்து மதிப்பிடுவோம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *