வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இரவு 10 மணி வரையில் கனமழை பெய்தது. அதன்பின் திடீரென அதி கனமழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் சாலைகள், தெருக்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடின. சென்னையை சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.சென்னை விமான நிலையத்தில் கனமழை காரணமாக விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பார்வையிட்டு வருகிறார்.சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட கல்யாணபுரம் கால்வாய் பகுதி, சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே உள்ள வால்டாக்ஸ் சாலையில் இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.இதையடுத்து மழை பாதிப்பு நிலவரம் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களையும் அவர் வழங்கி வருகிறார் .