தென் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தலைநகர் சென்னையில் நேற்று முதலே இடைவிடாமல் மழை பெய்து வருவதால் சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் தேங்கியதால் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன. நாளையும் நாளை மறுநாளும் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நாளை அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவை வழங்கும் துறைகள் தவிர்த்து அனைத்து அரசு அலுவலகங்களும் விடுமுறை அளிக்கப்படுகிறது. மழை நிலவரங்களை கருத்தில் கொண்டு தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆவின், பொது போக்குவரத்து, மின்சாரம், உள்ளாட்சித் துறை, மருத்துவத் துறை, வருவாய்த் துறை போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத் துறைகள் தவிர்த்து சென்னை மாவட்டத்திலுள்ள இதர அரசு அலுவலகங்களுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.