சுய நினைவு இழந்த வாலிபரை, தன் தோளில் சுமந்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்ராஜேஸ்வரிக்கு முதல்வர் பாராட்டு

தொடர் மழை காரணமாக சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில், மரக்கிளை முறிந்து விழுந்ததில், சுய நினைவு இழந்த வாலிபரை, தன் தோளில் சுமந்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியை, முதல்வர் நேரில் வரவழைத்து பாராட்டி, வாழ்த்து மடல் வழங்கினார்.வாழ்த்து மடலில், முதல்வர் கூறியிருப்பதாவது:இது மக்களின் நலன் காக்கும் அரசு என்ற எண்ணத்தை மனதில் பதிய வைத்து, அரசு நிர்வாகம் சார்ந்த ஒவ்வொருவரும், அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றனர்.அதற்கு மகுடம் சூட்டுவது போல, மழை பேரிடர் நேரத்தில், மனித உயிர் காத்த தங்களின் மகத்தான பணிக்கு, நெஞ்சார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில், பெருமழையில் சிக்கி தவித்து, முறிந்து விழுந்த மரத்தின் கீழே, சுயநினைவின்றி கிடந்த, உதயா என்பவரின் உயிர் காக்கும் முயற்சியில் துணிவுடன் ஈடுபட்டீர்கள். ‘கோல்டன் ஹவர்’ எனப்படும், அந்த பொன்னான நேரத்தை சரியாக உணர்ந்து, அவரை தோளில் சுமந்து ஓடிச் சென்று, ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தீர்கள். அவரை உயிர் பிழைக்க வைக்க முற்பட்ட, தங்களின் அர்ப்பணிப்பு மிக்க கடமையுணர்வும், சீருடை பணியாளர்களுக்குரிய, ஈர இதயத்தின் வெளிப்பாடும் போற்றுதலுக்கு உரியவை.தடகள போட்டிகளில் சிறந்த வீராங்கனையாக, சாதனைகள் பல புரிந்ததுடன், 1992 கும்பகோணம் மகாமகத்தின் போது ஏற்படுத்தப்பட்ட நெரிசலில் உயிருக்கு போராடியவர்களை மீட்பதில், தாங்கள் ஆற்றிய பணி, எந்நாளும் நினைவில் கொள்ளத்தக்கது.காவல் பணியில், எளிய மக்களின் துயர் துடைக்கும் கரங்களாக, தங்கள் செயல்பாடு பல முறை அமைந்துஉள்ளது. கைவிடப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருந்த பெண்களை மீட்டு, அரசு காப்பகத்தில் சேர்ப்பது; குற்றவாளிகளை துணிச்சலுடன் எதிர்கொண்டு, சட்ட நடவடிக்கை மேற்கொள்கிறீர்கள்.

தங்களின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் பலவும், காவல் துறை உயர் அதிகாரிகளின் பாராட்டுகளுக்கும், பொதுமக்களின் வாழ்த்துகளுக்கும் உரியவையாக அமைந்துள்ளன. சென்னை, டி.பி.சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியாகிய தங்களின் மனிதாபிமான செயல்பாடு, தமிழக காவல் துறையினர் அனைவருக்கும், பெருமை சேர்க்கும் வகையில் அமைந்து உள்ளது.காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும், முதல்வர் என்ற முறையிலும், மழைக்கால பேரிடர் நேரத்தில், தொடர்ச்சியாக பொதுமக்களை சந்தித்து, அவர்களின் தேவைகளை கேட்டறிந்தவர் என்ற முறையிலும், தங்களின் மனிதாபிமானமிக்க உயிர் காப்புப் பணிக்கு, என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.

‘காவல் துறை உங்கள் நண்பர்’ என்பதற்கேற்ப, கம்பீரமாகவும், கருணை உள்ளத்துடனும், தாங்கள் மேற்கொண்ட பணி, காவல் துறையில் உள்ள அனைவருக்கும், பெருமையையும், ஊக்கத்தையும் அளிக்கக் கூடியது. தங்களின் சேவைக்கு வாழ்த்துக்கள். சட்டத்தையும், மக்களையும் காக்கின்ற பணி தொடரட்டும்.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *