வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள், தெருக்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று இரவில் இருந்து காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை மழையின் அளவு அதிகரித்தது.
இதனால் சாலைகளில் ஓடும் வெள்ளத்தின் அளவு கூடியது. இதனால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 11 சுரங்கப்பாதைகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. இதனால் 11 சுரங்கப்பாதைகளும் மூடப்பட்டுள்ளது. 7 சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று மாலை சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தரைக்காற்று 40 முதல் 45 கி.மீட்டர் வேகத்தில் வீசும் என எச்சரித்தது. தற்போது சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது.இதனால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுகிறது. கிண்டி ஆளுநர் மாளிகை அருகே இன்று காலை மரம் ஒன்று முறிந்து சாலையில் விழுந்தது. இதற்கிடையே பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.