மியான்மரில் ஆங் சான் சூகி மீது மீண்டும் ஒரு புதிய குற்றச்சாட்டு பதிவு

மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் அந்த நாட்டு ராணுவம், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதை தொடர்ந்து, நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்தது.அப்போது முதல் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி மீது, தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தது, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிக்காததன் மூலம் தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தை மீறியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மியான்மரின் ராணுவ ஆட்சியாளர்கள் ஆங் சான் சூகி மீது புதிய குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது தேர்தல் மோசடி குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர். ஆங் சான் சூகி, மட்டுமின்றி முன்னாள் அதிபர் வின் மைன்ட் மற்றும் மியான்மர் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஆகியோர் மீதும் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி அமோக வெற்றி பெற்றதும், இதனை ஏற்க மறுத்த ராணுவம் புரட்சி செய்து, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *