2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை தாங்கி தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.இவ்விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன், கேப்டன் டோனி இந்தியா அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சென்னை அணியின் கேப்டன் டோனி, வெற்றிக் கோப்பையை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கி வாழ்த்து பெற்றார். விழாவில் டோனி பேசுகையில், தமிழகம் தனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருப்பதாகவும், தனது முதல் டெஸ்ட் போட்டி சென்னையில்தான் தொடங்கியது என்றும் குறிப்பிட்டார்.சென்னையில் விளையாடிய ஒவ்வொரு போட்டியின் போதும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவு அளப்பரியது என்று கூறிய டோனி, சென்னை அணியின் ரசிகர்கள் பலம் தமிழ்நாட்டைக் கடந்தது என்றார். 5 ஆணடுகள் கடந்தாலும் கூட நான் விளையாடும் கடைசி போட்டி சென்னையில் தான் என்றும் டோனி தெரிவித்தார்.