அதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர் ஓ.பி.எஸ், என்றும் திமுக ஒருபோதும் குறுக்குவழியில் செல்ல விரும்பவில்லை எனவும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், திமுக நினைத்திருந்தால் ஒரே நொடியில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை என்றைக்கோ கவிழ்த்திருக்க முடியும் என்றும் ஆனால் அப்படி கொல்லைப்புறமாக சென்று ஆட்சி செய்யவிரும்பவில்லை எனவும் ஸ்டாலின் கூறினார்.மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார்.முதலமைச்சர் ”மூன்று முறை முதலமைச்சர் ஆக வாய்ப்புக் கிடைத்தும் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாதவர் ஓ.பன்னீர்செல்வம். அவருக்கு அந்த மூன்று முறை பொறுப்பு கொடுத்த ஜெயலலிதாவைப் பற்றி கூட அவர் கவலைப்பட்டதில்லை.” எல்லாம் நடிப்பு ”சமீபத்தில் அவர் ஒரு வீடியோ படப்பிடிப்பு எடுத்து வெளியிட்டு இருக்கிறார். அந்த காட்சிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவ்வளவு அமைதியாக, பொறுமையாக, உத்தமபுத்திரனாக, கையெடுத்துக் கும்பிட்டு நாட்டுக்கு நல்லது செய்தது போல மக்களை ஏமாற்றுகிறார். அரசியலில் ஒரு சிலருக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் அடிக்கும்.அதுபோல அதிர்ஷ்டத்தில் வந்தவர் தான் இவர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று சொன்னது நாங்கள் அல்ல. நீதி விசாரணை கேட்டது நாங்கள் அல்ல. இன்றைக்குத் துணை முதலமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தான் சொன்னார். விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இது வரைக்கும் உண்மை வரவில்லை. ஓ.பன்னீர்செல்வத்தை 8 முறை ஆஜராக அழைத்தார்கள். ஒருமுறை கூட அவர் செல்லவில்லை. அம்மா ஆட்சி இதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள். அம்மா படத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். அம்மா படத்தை மேசையில் வைத்துக்கொண்டு ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.