கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அமெரிக்காவில் பைசர், மாடர்னா தடுப்பூசிகள் மிகப்பெரிய அளவில் செலுத்தப்பட்டு வருகின்றன. தடுப்பூசிகள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் இரண்டு முறை செலுத்தப்பட வேண்டும்.அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் இரண்டு டோஸ்கள் செலுத்திக்கொண்டனர். இதனால் கொரோனா வைரஸ் தங்களை தாக்காது என்ற நம்பிக்கையில் இருந்தனர். அப்போதுதான் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளின் செயல்திறன் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதனால் அமெரிக்காவில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அமெரிக்க சுகாதாரத்துறை ஆணையம் பரிந்துரை செய்தது. அதனடிப்படையில் அமெரிக்காவில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.இந்நிலையில், 78 வயதான அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனாவிற்கு எதிராக பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் 60 மில்லியன் மக்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்களாக உள்ளனர்.ஜோ பைடன் டிசம்பர் முதல் டோஸும் (பைசர்), ஜனவரி மாதம் 2-வது டோஸும் செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.